தாமரைக்குளம் (திரைப்படம்)
தாமரைக்குளம் 1959 ஆம் ஆண்டு வெளியான இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் சௌகார் ஜானகி, வி. கோபாலகிருஷ்ணன், எம். ஆர். ராதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2]
தாமரைக்குளம் | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | எஸ். ஆர். நடராஜன் எஸ். ஆர். வீரபாகு |
கதை | எஸ். ஆர். நடராஜன் |
இசை | ஹெச். பத்மநாப சர்மா டி. ஏ. மோதி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எஸ். ஆர்.வீரபாகு |
கலையகம் | கல்யாணி பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1959 (இந்தியா)[1] |
நீளம் | 16,209 அடி |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
திரைக்கதைச் சுருக்கம்
கிராமத்திலிருக்கும் தாமரைக்குளத்தை அந்த ஊர் மக்கள் பயன்படுத்தக்கூடாதென ஒரு பேராசை பிடித்த ஜமீன்தார் தடை விதிக்கிறார். செல்லையா என்ற இளைஞனின் தலைமையில் அந்த ஊர் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தனது நண்பன் சேகரிடம் உதவி பெறுவதற்காகச் செல்லையா சென்னைக்குச் செல்கிறான்.
கதாநாயகி கடத்தப்படுவது, சேகர் கொலை செய்யப்படுவது போன்ற பல சிக்கல்களும், குழப்பங்களும் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் செல்லையாவும் ஊர் மக்களும் எவ்வாறு முறியடிக்கிறார்கள் என்பதே மீதிக் கதையாகும்.[2]
நடிகர்கள்
தயாரிப்பு விபரம்
கல்யாணி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் வெளியீடான தாமரைக்குளம் திரைப்படத்தை கதாசிரியர் எஸ். ஆர். நடராஜனும், ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். வீரபாகுவும் கூட்டாகத் தயாரித்தனர். முக்தா சீனிவாசன் திரைப்படத்தை இயக்கினார். மயிலாப்பூரில் நடைபெற்ற நாடகமொன்றை சீனிவாசன் பார்த்திருந்தார். அந்நாடகத்தில் நடித்த நாகேஷின் நகைச்சுவை நடிப்பு சீனிவாசனுக்குப் பிடித்திருந்தது. ஆகவே தாமரைக்குளம் படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நாகேஷை அறிமுகம் செய்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக நாகேஷுக்கு ₹2500 ஊதியம் கொடுக்கப்பட்டது. இதுவே நாகேஷுக்கு திரைப்பட அறிமுகமாகவும் அமைந்தது.
எஸ். எம். ராம்குமார், காமேஸ்வரன் ஆகியோர் நடன ஆசிரியர்களாகப் பணியாற்றினார்கள். தற்போது மூடப்பட்டுவிட்ட கோல்டன் கலையகத்தில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டது.[2]
பாடல்கள்
இத் திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள்: ஹெச். பத்மநாப சாஸ்திரி, டி. ஏ. மோதி ஆகியோர். பாடல்களை இயற்றியவர் முகவை ராஜமாணிக்கம்.[1]
பின்னணி பாடியவர்கள்: பி. சுசீலா, டி. ஏ. மோதி, பி. லீலா, சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், ஏ. பி. கோமளா, நெல்லூர் ஜானகி ஆகியோர்.[2]
வரவேற்பு
பெரும்பாலும் உணர்ச்சி மயமான நீண்ட வசனங்கள் பேசும் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் போன்ற படங்கள் வெளி வந்த ஒரு கால கட்டத்தில் இடதுசாரி கருத்துகளைக் கொண்ட இத்திரைப்படம் அவ்வளவாக அக்கால இரசிகர்களைக் கவரவில்லை என திரைப்பட ஆய்வாளர் ராண்டார் கை கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால் சிறந்த நகைச்சுவை நடிகரான நாகேஷை திரையுலகுக்கு அறிமுகம் செய்த படம் என்ற வகையிலும், பின்னர் வெற்றிப் படங்களைத் தந்த முக்தா சீனிவாசனின் ஆரம்ப காலப் படம் என்ற வகையிலும் இத்திரைப்படம் நினைவு கூரத்தக்கது எனவும் ராண்டார் கை கூறியுள்ளார்.[2]
இந்தத் திரைப்படத்தில் நாகேஷின் நடிப்பை ஆனந்த விகடன் இதழ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.[3]
மேற்கோள்கள்
- (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails24.asp.
- ராண்டார் கை (16 மே 2015). "Blast from the Past: Thamarai Kulam 1959". தி இந்து. மூல முகவரியிலிருந்து 10 நவம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 நவம்பர் 2016.
- மோகன் வி. ராமன் (1-15 மார்ச் 2009). "He made you weep while you laughed". Madras Musings. மூல முகவரியிலிருந்து 10 நவம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 நவம்பர் 2016.