அமுதபாரதி

அமுதபாரதி என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் ஓவியர் அமுதோனின் இயற்பெயர் மாமண்டூர் குமாரசாமி தாயுமானவர் என்பது ஆகும். இவர் ஐக்கூ (Haiku) என்னும் சப்பானிய கவிதை வடிவத்தில் தமிழ்க் கவிதைகள் எழுதும் முன்னோடிகளில் ஒருவர். அந்தாதி வடிவில் ஐக்கூ எழுதி தமிழ், சப்பானிய கவிதை வடிவங்களை இணைத்தவர். இவர் அமுதோன் என்னும் பெயரில் புத்தகங்களுக்கு அட்டைப்படங்களை வடிவமைக்கிறார்; உள்ளடக்க ஓவியங்களை வரைகிறார். இவரது ஓவியக்கூடம் சென்னை தியாகராய நகரில் உள்ள சிவஞானம் தெருவில் அமைந்திருக்கிறது. பட்டினப்பாக்கத்தில் இல்லம் அமைந்து இருக்கிறது.

அமுதபாரதி என்னும்
மா. கு. தாயுமானவர்

ஓவியக் கவிஞர்
பிறப்பு
நாள்:ஆகத்து 31, 1939(1939-08-31)
இடம்:மாமண்டூர், தமிழ்நாடு, இந்தியா
புனைப்பெயர் அமுதபாரதி
அமுதோன்
தொழில் ஓவியர்
நாடு இந்தியர்
இலக்கிய வகை ஓவியம்
ஐக்கூக் கவிதைகள்
கருப்பொருட்கள் தமிழிலக்கியம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
புள்ளிப் பூக்கள்
ஐக்கூ அந்தாதி
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
பாவேந்தர் பாரதிதாசன் விருது
வித்தகர் விருது

பிறப்பு

அமுதபாரதி 31 ஆகத்து 1939 ஆம் நாளில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் வாழ்ந்த மா. குமாரசாமி – வள்ளியம்மாள் என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[1]

படைப்புகள்

வ.எண் ஆண்டு நூலட்டை நூல் பொருள் பதிப்பகம்
01 1982 உதயகாலங்கள் மரபுக் கவிதை நர்மதா பதிப்பகம், சென்னை
02 1982 இணை தேடும் இதயம் மரபுக் கவிதை நர்மதா பதிப்பகம், சென்னை
03 1983 மன்மத ராகங்கள் மரபுக் கவிதை நர்மதா பதிப்பகம், சென்னை
04 1984 புள்ளிப் பூக்கள் ஐக்கூக் கவிதை நர்மதா பதிப்பகம், சென்னை
05 1989 ஐக்கூ அந்தாதி ஐக்கூக் கவிதை நர்மதா பதிப்பகம், சென்னை.
06 1990 காற்றின் கைகள் ஐக்கூக் கவிதை காவ்யா பதிப்பகம், பெங்களூர்.
07 1998 ஐக்கூ அருவி ஐக்கூக் கவிதை நர்மதா பதிப்பகம், சென்னை.
08 1999 நூறு நிலா மரபுக்கவிதை நர்மதா பதிப்பகம், சென்னை.
09 2000 ஐக்கூ விதைகள் ஐக்கூக் கவிதை நர்மதா பதிப்பகம், சென்னை.
10 2009 நூறு சுரதா:சித்திர வடிவங்களும் தகவல் கவிதைகளும் வாழ்க்கை வரலாறு மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

மொழிபெயர்ப்பு

அமுதபாரதியின் கவிதைகள் சிலவற்றை பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருக்கிறார். அக்கவிதைகளை அப்பேராசிரியர் உருவாக்கியுள்ள அமுதபாரதி என்னும் வலைப்பூவில் காணலாம்.

பெற்ற விருதுகள்

அமுதபாரதிக்கு 1991ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது.

சென்னை கம்பன் கழகம் வழங்கும் வித்தகர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[1]

அமுதபாரதியின் கவிதைகளில் சில

அமுதபாரதியின் மரபுக்கவிதை

இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?
0

தின்ற பழங்கள்
மிஞ்சிய கொட்டைகள்
ஓ! எத்தனை மரங்கள்!
0

துளித்துளியாய்ச் சேமிப்பு
சேர்ந்தது பெருந்தொகை
சீச்சீ.... வரதட்சணைக் கொள்கை
0

வலிக்கிறது நெஞ்சம்
எத்தனை புத்தகங்கள்
சுமக்கும் குழந்தை முதுகு
0

சன்னலைத் திறந்தேன்
செய்தித்தாள்
சட்டசபை அசிங்கம்
0

ஜெட்டுக்குள் பறந்தான்
சுட்டு சுட்டு வீழ்த்தினான்
சீச்சீ ..... அமைதிக்காம்
0

நீண்ட அலகு நாரை
நீரைக் குத்திக் கிழித்தாலும்
நீங்காதிருக்கும் நிலா
0

காதலனுக்குத் தெரியும்
காதலியின் கண்ணின்
நிலா
0

வருகிறது பாடல்
மூங்கில் காட்டில்
முழுநிலா
0

மேனியில் தண்ணீர்
படாமல் குளிக்கும்
மஞ்சள் நிலா
0

சருகே சருகே
விழாதே
குளத்தில் நிலா

அமுதபாரதி வடிவமைத்த நூலட்டைகள் சில

சான்றடைவு

  1. http://www.tamilvu.org/courses/hg200/hg205/html/hg205taa.htm
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.