அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam, ஆகஸ்ட் 26, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். இவர் இறப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.

அ. அமிர்தலிங்கம்

நாஉ
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
4 ஆகத்து 1977  24 அக்டோபர் 1983
முன்னவர் ஜே. ஆர். ஜெயவர்தனா, ஐதேக
பின்வந்தவர் அனுரா பண்டாரநாயக்கா, இசுக
தலைவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி
பதவியில்
1977–1989
முன்னவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம்
பின்வந்தவர் எம். சிவசிதம்பரம்
வட்டுக்கோட்டை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1956–1970
முன்னவர் வி. வீரசிங்கம், தகா
பின்வந்தவர் ஏ. தியாகராஜா, தகா
காங்கேசன்துறை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1983
முன்னவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம், இதக
பின்வந்தவர் எவருமில்லை
இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேசியப் பட்டியல் உறுப்பினர்
பதவியில்
1989–1989
பின்வந்தவர் மாவை சேனாதிராஜா, தஐவிமு
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 26, 1927(1927-08-26)
பண்ணாகம், வட்டுக்கோட்டை, இலங்கை
இறப்பு சூலை 13, 1989(1989-07-13) (அகவை 61)
கொழும்பு, இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி
படித்த கல்வி நிறுவனங்கள் இலங்கை சட்டக் கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
சமயம் சைவ சமயம்
இனம் இலங்கைத் தமிழர்
இணையம் amirthalingam.com

வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும் (1879-1952, தொடருந்து நிலையப் பொறுப்பாளர்) வள்ளியம்மைக்கும் 1927 ஆகத்து 26 ஆம் நாள் பிறந்தார். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் (1931-1936), சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் (19366-1946) உயர்கல்வியையும் கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1951 இல் நியாயவாதியாக பட்டம் பெற்று வெளியேறினார்[1].

அரசியல் வாழ்க்கை

சட்டத்துறையைக் கைவிட்டு தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். 1952 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கை பாராளுமன்றம் சென்றார்.[1][2]

இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். 1972 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் கூட்டணி என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார். தந்தை செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார்.

1977 ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார். இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த முதலாவது தமிழர் அமிர்தலிங்கம் ஆவார்.

கொலை

எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் ஆரம்பத்திலும், அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப் போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின. இது தமிழ்ப் பகுதிகளில் தீவிரவாதப் போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கி இருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்றவகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.

இதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. 1989 சூலை 13 ஆம் நாள் கொழும்பில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே நாளில் அதே வீட்டில் யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார். இவர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளே கொன்றார்கள் என்பது தான் வேதனைக்குரிய விஷயம் .[3]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Staff Reporter (2005-08-20). "Recalling Amirthalingam". The Hindu. http://www.hindu.com/2005/08/20/stories/2005082005640200.htm. பார்த்த நாள்: 2008-05-20.
  2. சத்தியேந்திரா, நடேசன் (2 July 1999). "Appapillai Amirthalingam" (in ஆங்கிலம்). http://tamilnation.co/saty/9907amirthalingam.htm. பார்த்த நாள்: 2008-05-20.
  3. சி. புஸ்பராஜா. (2003). ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம். சென்னை: அடையாளம். பக்கம் 483.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.