வாங்கல்
வாங்கல் (Vangal) தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லையில், கரூர் நகரிலிருந்து வடக்கே 11 கீ.மீ தொலைவிலும், நாமக்கல் நகரிலிருந்து தெற்கே 21 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள கிராமம்.
நிர்வாக அமைப்பு
கரூர் ஊராட்சி ஒன்றியம், வாங்கல் குப்புசிபாளையம் ஊராட்சி. 13 வார்டுகளை உள்ளடக்கியது. வாங்கல் மற்றும் குப்புசிபாளையம் என இரண்டு கிராம நிர்வாக அலுவலம் உள்ளது. நன்செய் பகுதி வாங்கல் கிராம அலுவலர் கட்டுப்பாட்டிலும், புன்செய் பகுதி குப்புசிபாளையம் கிராம அலுவலர் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
கிராமங்கள்
கு.வேலாயுதம் பாளையம், காட்டூர், சீனிவாசபுரம், நல்லகுமரன்பாளையம், பசுபதிபாளையம், மாரிகவுண்டன்பாளையம், கோப்பம் பாளையம், சக்கரபாளையம், தவிட்டுபாளையம், ஒடையூர், கருப்பம்பாளையம்
எல்லைகள்
மேற்கே மண்மங்கலம் மற்றும் நன்னியூர் ஊராட்சிகள், கிழக்கே நெரூர் வடக்கு ஊராட்சி, வடக்கே நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருராட்சி, தெற்கே மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி மற்றும் மண்மங்கலம் ஊராட்சிகள்.
மக்கள் தொகை
வாங்கல் குப்புச்சிப்பாளையம் ஊராட்சி மன்றத்தின் 2001 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கை சுமார் 9100 ஆகும்.
பள்ளிகள்
1 அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாங்கல் 2.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,வாங்கல் 3.புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வாங்கல் 4.கரூர் வெற்றி வினாயகா மேல்நிலைப் பள்ளி, எல்லைமேடு வாங்கல்.
(சென்னை மாநகரின் முன்னாள் காவல்துறை ஆணையர் திரு.காளிமுத்து ஐ.பி.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாங்கல் முன்னாள் மாணவர்). இது தவிர ஆறு தொடக்கப் பள்ளிகளும் கரூர் ஊராட்சி ஒன்றியக் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.
கரூரில் வரும் கல்வி ஆண்டில் (2016-17) தமிழக அரசால் தொடங்கபடவுள்ள அரசு மருத்துவ கல்லூரி வாங்கல் அருகே கரூர் சாலையில் சுமார் 3 கி.மீ தொலைவில் அமய உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய கோவில்கள்
மாரியம்மன் திருக்கோவில் வாங்கலில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருநாள் அனைத்து சமுதாய மக்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
வாங்கலம்மன் திருக்கோவில் வாங்கலில் அமைந்துள்ளது சிறப்பாகும். பழைய வாங்கலம்மன் கோவில், காவிரி ஆற்றிற்குச் செல்லும் வழியிலேயே அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
முக்கிய தொழில்
காவிரி ஆறு பாய்வதால் இக்கிராமம் விவசாயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. பணப்பயிர்களான கரும்பு, வாழை முக்கிய விவசாயங்களாகும். நெல், வெற்றிலை, கோரை, தென்னை சாகுபடி ஆகியவற்றில் வாங்கல் பகுதி சிறந்து விளங்குகிறது.
நீர்ப்பாசனங்கள்
காவிரி ஆறு, வாங்கல் வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால் மற்றும் நெரூர் வாய்க்கால் முக்கிய பாசனமாகும், மற்ற விவசாயம் சார்ந்த தொழில்களான பால் உற்பத்தியில் வாங்கல் சிறந்து விளங்குகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பால் ஆவின் மற்றும் தனியார் பண்ணைகளுக்கு அனுப்பப்படுகிறது.
வங்கிகள்
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
- பல்லவன் கிராம வங்கி
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் இரண்டு செயல்பட்டு வருகின்றன.
தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ஏடிஎம்)
பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் வங்கி வளாகத்திலும், இந்தியா கேஷ் ஏடிஎம் கடைத்தெரு அருகிலும் செயல்படுகிறது.
தொலைதொடர்பு
பி. எஸ். என். எல் தொலைபேசி அலுவலகம் இங்கு இயங்கி வருகிறது. மற்றும் தனியார் செல்போன் சேவைகள் ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாபோன், போன்றவை உள்ளது.
அஞ்சல் நிலையம்(பின் கோடு: 639116)
மூன்று அஞ்சல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. வாங்கல் துணை அஞ்சலகம், வாங்கல் கிழக்கு கிளை அஞ்சலகம் மற்றும் குப்புசிபாளையம் கிளை அஞ்சலகம். அருகில் உள்ள தலைமை அஞ்சலகம்: கரூர்-639001
போக்குவரத்து
சாலை போக்குவரத்து
கரூர் வட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இங்கு இருந்து எளிதில் சென்று வர சாலை வசதி உள்ளது.
வாங்கல் - கரூர் இரு வழி சாலை (மாவட்ட முக்கிய சாலை); வாங்கல்- மண்மங்கலம் இடை வழி சாலை(மாவட்ட முக்கிய சாலை) (இது தேசிய நெடுந்சாலை 7 உடன் வாங்கலை இணைக்கிறது); வாங்கல்-நெருர் இடை வழி சாலை வாங்கல்-புகளூர் இடை வழி சாலை தளவாபாளையம் வழி
கரூர் - நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வாங்கல் - மோகனூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே 1500 மீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் மற்றும் சாலை போக்குவரத்து
பேருந்து வசதிகள்
கரூர் - வாங்கல் இடையே 20 நிமிடங்களுககு ஒரு முறை காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை அரசு,தனியார் மற்றும் மினி பேருந்துகள் இயங்கி வருகின்றன. வாங்கல் - பரமத்தி வேலூர் இடையே காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நெரத்திற்கு ஒரு முறை அரசு,தனியார் & மினி பேருந்துகள் தளவாபாளையம், புகளூர், வேலாயுதம்பாளையம் வழியாக இயங்கி வருகின்றன.
இது தவிர அருகில் உள்ள நெருர், திருமக்கூடலூர் ஆகிய பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன.
இரயில் போக்குவரத்து
கரூர் -சேலம் இடையே புதிய அகல இரயில் பாதை வாங்கல் வழியாக செல்கிறது. இதற்காக வாங்கலில் புகை வண்டி நிலையம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வாங்கல் ரயில் நிலையத்தில் தற்சமயம் பயணிகள் ரயில் மட்டும் நின்று செல்கிறது.
அமைவிடம்: புது வாங்கலம்மன் கோவில் மற்றும் திருமண மண்டபம் மிக அருகாமையில் 100 மீட்டர் தொலைவிலும், வாங்கல் கடை வீதியில் இருந்து மேற்கே சுமார் 300 மீட்டர் தொலவிலும் வாங்கல் ரயில் நிலையம் உள்ளது.
ரயில் கால அட்டவனை: காலை 07.30 மற்றும் இரவு 07.00 கருர் செல்வதற்கு (சேலம் கரூர் பயணிகள் வண்டி) காலை 08:40 மற்றும் இரவு 08.00 மோகனூர் , நாமக்கல், ராசிபுரம் மற்றும் சேலம் செல்வதற்கு(சேலம் கருர் பயணிகள் வண்டி)
அருகில் உள்ள பெரிய சந்திப்பு ரயில் நிலையம்: கரூர் (தெற்கே 11 கி.மீ)
மருத்துவ வசதி
வாங்கலில் அரசு ஆரம்ப சுகாதர நிலையம் இயங்கி வருகிறது. இங்கு இப்பகுதி மக்கள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இரண்டு துணை சுகாதார நிலையங்களும், தனியார் மருத்துவமனைகள் சேவை புரிந்து வருகின்றன. இங்கு கால்நடை மருந்தகம் ஒன்றும் இயங்கி வருகிறது.
காவல் நிலையம்
வாங்கலில் காவல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது வாங்கல், நெருர், அரங்கநாதன் பேட்டை, சோமூர், மின்னாம்பள்ளி, மண்மங்கலம், நன்னியூர் புதூர், கடம்பங்குறிச்சி, செம்மடை ஆகிய பகுதி மக்களின் பாதுகாவலனாக இக் காவல்நிலையம் இயங்கி வருகின்றது.
பிரபலங்கள்
திரைப்பட நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி இவ்வூரில் பிறந்தவர்களாவர். முன்னாள் மத்திய அமைச்சர் கோபாலும் இக்கிராமத்தை சார்ந்தவர்.