வத்தல் மலை
வத்தல் மலை என்பது தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலையாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள இம்மலை தர்மபுரி நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.[1] இம்மலையில் சின்னாங்காடு, பால்சிலம்பு, பெரியூர், ஒன்றிக்காடு, கொட்லாங்காடு, மண்ணாங்குழி, குழியனூர்-பெரியூர், நாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் 5000 ஆயிரத்துக்கு மேற்பட்ட பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். பல ஆண்டுகளாக இந்த மலைக்குச் செல்ல சாலைவசதி இல்லாத நிலை நீடித்துவந்த நிலையில். 2013 ஆம் ஆண்டு பூமரத்தூர் அடிவாரத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவுக்கு 15 கொண்டை ஊசி வளைவுகளுடன் மலைப்பாதை அமைக்கப்பட்டது.

இம்மக்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகும். இம்மலை விவசாயிகள் பாரம்பரியமாக தினை, கேழ்வரகு, சாமை, போன்ற சிறுதானியங்களையும், கடுகு, அவரை போன்ற பயிர்களையும் சாகுபடி செய்துவருகின்றனர். வத்தல் மலையில் ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் குளிர்ந்த காலநிலை நிலவுவதால், காபி சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளதால் இம்மலை மக்களை மாவட்ட நிர்வாகம் காபி சாகுபடியில் ஈடுபட அறிவுறுத்தியது. இதன்படி 2011 ஆம் ஆண்டு மலைவாழ் மக்கள் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 15 இலட்சம் ஒதுக்கீடு செய்து, அத்திட்டத்தின்படி விவசாயிகளின் 100 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் காபி செடி நடவு செய்யப்பட்டது.[2] இந்தப் பரப்பளவு வளர்ந்து 2018 ஆண்டு காலகட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் காபி பயிரிடப்படுகிறது. இந்த காபி பயிரில் ஊடுபயிராக ஆரஞ்சு, மிளகு, சில்வர் ஓக் போன்றவற்றையும் நட்டு வளர்த்து வருகின்றனர்.[3]
மேற்கோள்கள்
- எஸ். ராஜாசெல்லம் (2014 நவம்பர் 12). "இயற்கையும், பாரம்பரியுமும் மாறாத மலை கிராமம்". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 1 சனவரி 2017.
- எஸ். ராஜா செல்லம் (திசம்பர் 2016). "காபி சாகுபடியில் ஆர்வம் காட்டும் வத்தல்மலை விவசாயிகள்". தி இந்து. doi:19.
- "வத்தல்மலை மக்களை வாழ வைக்கும் காபி பயிர் உரிய விலை கிடைக்க அரசு கொள்முதல் மையம் அமைக்க கோரிக்கை". இந்து தமிழ். திசம்பர் 23 2018.