வண்ணம் (ஒலி)
வண்ணம் என்பது பல்பொருள் ஒரு மொழி ஆகும். இங்கு வண்ணம் என்பது, ஓசையின் நிறம் (tonal colour) என்று பொருள்படும். இதனைப் பலர் சந்தம் என்ற சொல்லாலேயேக் குறிக்கின்றனர். வண்ணம் என்ற சொல்லே, சிறப்பான தமிழ்ச் சொல்லாகும். தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகள் 34-இல், வண்ணமும் ஒன்று என்கிறார்.
வண்ண வகைகள்
இது இருபது வகைப்படும் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
- குறில்,நெடில் எழுத்துக்களால் வகைபடுபவை வருமாறு;-
இவ்வண்ணங்களுள்,
- குறுஞ்சீர் வண்ணம்
- நெடுஞ்சீர் வண்ணம்
- சித்திர வண்ணம் என்றழைக்கப்படும்.
இவை மூன்றும், குறில், நெடில் எழுத்துகள் பாடல்களின் இடம்பெறும் நிலையை வைத்துப் பெயரிடப்படுகின்றன.
குறுஞ்சீர் வண்ணம்
குறில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வருவதனைத் தொல்காப்பியம் குறுஞ்சீர் வண்ணம் என்கிறது.
குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும் (தொல். பொருள் 213)
(எடுத்துக்காட்டு)
பொழில் தரு நறுமலரே புதுமணம் விரிமணலே (சிலம்பு 7:14)
நெடுஞ்சீர் வண்ணம்
நெடில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வரும் நிலையில் அமைவதனை நெடுஞ்சீர் வண்ணம் என்கிறது.
நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும் (தொ.பொ.212)
(எடுத்துக்காட்டு)
வாராயோ தாயே - பாதம்
தாராயோ நீயே - (கீர்த்தனை)
சித்திர வண்ணம்
நெட்டெழுத்தும், குற்றெழுத்தும் சார்ந்து வருவதனைச் சித்திர வண்ணம் என்று குறிப்பிடுகின்றது.
(எடுத்துக்காட்டு)
பாதி மதிநதி போது மணிசடை - (திருப்புகழ்)
- ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த எழுத்துகளால் உருவாகும் வண்ண வகைகள் வருமாறு;-
- வல்லிசை வண்ணம்
- மெல்லிசை வண்ணம்
- இயைபு வண்ணம்
வல்லிசை வண்ணம்
ஒரு பாட்டில் வல்லெழுத்துகள் மிக்கு வருவதனை 'வல்லிசை வண்ணம்' என்பர்.
வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே (தொல்காப்பியம்.பொ.208)
(எடுத்துக்காட்டு)
புற்றரவு பற்றியகை நெற்றியது மற்றொருகண்
ஒற்றை விடையன் (சம்பந்தர் தேவாரம். 3:68:2)
மெல்லிசை வண்ணம்
ஒரு பாட்டில் மெல்லெழுத்துகள் மிக்கு வருவதனை 'மெல்லிசை வண்ணம்' என்பர்.
மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே” (தொல்காப்பியம்.பொ.209)
(எடுத்துக்காட்டு)
இயைபு வண்ணம்
ஒரு பாட்டில் இடையினயெழுத்துகள் மிக்கு வருவதனை 'இயைபு வண்ணம்' என்பர்.
இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே ” (தொல்காப்பியம்.பொ.210)
(எடுத்துக்காட்டு)