வட்டாட்சியர்
தமிழக மாவட்டங்களில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வருவாய் வட்டத்தின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் இருக்கிறார். வட்டாட்சியர்களை தாசில்தார் என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.
வட்டாட்சியர் பணிகள்
தமிழ்நாடு அரசின் வருவாய் துறை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும் நிர்ணயம் செய்துள்ளது. அவைகள்:[1]
- மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் வழியாக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
- கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வ்ட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
- வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்சனைகள் ஏதும் வந்து சட்டம் , ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
- வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
- மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் போன்றவர்களுக்கு வருவாய்த்துறைப் பணிகளில் உதவுகிறார்.
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
வருவாய்த்துறை இணையதளம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.