ராமேசியம்
ராமேசியம் புது எகிப்து இராச்சியத்தின் பாரோ இரண்டாம் ராமேசசின் நினைவுக் கோயில் ஆகும். இது மேல் எகிப்தில் உள்ள தேபன் நெக்ரோபோலிசில் அமைந்துள்ளது. இவ்விடம் நவீன லக்சோர் நகரத்துக்கு எதிரே நைல் ஆற்றின் மறுகரையில் மன்னர்களின் சமவெளியில் அமைந்துள்ளது. ராமேசியம் என்னும் பெயர் பிரெஞ்சு மொழிப் பெயரான "Rhamesséion" என்பதில் இருந்து பெறப்பட்டது. இப் பிரெஞ்சு மொழிப் பெயரை முதலில் உருவாக்கிப் பயன்படுத்தியவர் சோன் பிரான்சுவா சம்போலியன் (Jean-François Champollion) என்பவர். இவர் 1829 ஆம் ஆண்டில் இப்பகுதிக்குச் சென்றபோது இக்கோயிலின் அழிபாடுகளில் ராமேசசின் பெயரையும் பட்டங்களையும் குறிக்கும் பட எழுத்துக்களைக் கண்டு பிடித்தார்.

இரண்டாம் ராமேசசு பல கட்டிடங்களைத் திருத்தியதுடன் புதிய பல கட்டிடங்களையும் அமைப்பித்தான். இறப்பின் பின்னரும் தனது நினைவு நிலைத்திருக்கும் படியாக அவன் அமைத்த இக் கோயிலே அவற்றுள் சிறப்பானது. இது, புவியில் வாழும் தெய்வங்களாகக் கருதப்பட்ட பாரோக்களை வணங்குவதற்காக புது எகிப்து இராச்சியத்தின் அரச அடக்க நடைமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டது. இதுவரை கிடைத்துள்ள சான்றுகளின்படி, இரண்டாம் ராமேசசின் ஆட்சி தொடங்கிய சிறிது காலத்தின் பின் தொடங்கிய இதன் கட்டிட வேலைகள் 20 ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறியதாகத் தெரிகிறது.
ராமேசசின் நினைவுக் கோயில் "புதிய இராச்சியத்தின்" கட்டிடக்கலை நூல்களின் அடிப்படையில் கட்டப்பட்டது. நீள அச்சு வடமேற்கு-தென்கிழக்குத் திசையில் இருக்குமாறு அமைந்துள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக ஏறத்தாழ 60 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு வாயில் கோபுரங்கள் உள்ளன. இரண்டாவது வாயிலைத் தாண்டி உள்ளே நடுவில் ஒரு கருவறையும் அதைச் சூழ 48 தூண்களைக் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளன.[1] [2]