மொகாலி
மொகாலி (பஞ்சாபி:ਮੋਹਾਲੀ,) அல்லது சட்டபூர்வமான சாகிப்ஜாடா அஜித்சிங் நகர் , சுருங்க எஸ்ஏஎஸ் நகர், இந்தியாவில் சண்டிகர் நகரை அடுத்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் 18வது மாவட்டமும் நகரமும் ஆகும். சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங்கின் மகன் சாகிப்ஜாடா அஜித்சிங்கின் நினைவில் பெயரிடப்பட்டுள்ளது. சண்டிகர், பஞ்ச்குலாவுடன் இந்நகரமும் இணைந்து சண்டிகர் மூநகர் அல்லது சண்டிகர் தலைநகர் வலயம் என அறியப்படுகிறது. முன்பு ரூப்நகர் மாவட்டத்தின் பகுதியாக இருந்த இந்நகர் தனி மாவட்டமாக அண்மைக்காலத்தில் பிரிக்கப்பட்டது.
மொகாலி (சாகிப்ஜாடா அஜித்சிங் நகர்) | |
— நகரம் — | |
அமைவிடம் | 30°47′N 76°41′E |
நாடு | ![]() |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | சாகிப்ஜாதா அஜித் சிங் நகர் மாவட்டம் |
ஆளுநர் | Vijayendrapal Singh[1] |
முதலமைச்சர் | அமரிந்தர் சிங்[2] |
மக்களவைத் தொகுதி | மொகாலி (சாகிப்ஜாடா அஜித்சிங் நகர்) |
மக்கள் தொகை | 1,23,484 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 316 மீட்டர்கள் (1,037 ft) |
குறியீடுகள்
|

பின்னணி
பஞ்சாப் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபின்னும் பஞ்சாபின் தலைநகர் சண்டிகர் நடுவண் ஆட்சிப்பகுதியாக ஆனபின்னரும் 1966ஆம் ஆண்டின் இறுதியில் மொகாலி வடிவமைக்கப்பட்டது. சண்டிகர் நகரின் மேற்குப்பகுதியை ஒட்டியிருந்த மொகாலி, சண்டிகர் நகர வடிவமைப்பின் நீட்சியாக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் கட்டம் VII வரையே திட்டமிடப்பட்டிருந்தது. நகரின் விரைவான வளர்ச்சியினால் 1980களின் பின்பகுதியில் மேலும் கட்டமைக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 200,000 ஆக இருந்தது. இங்கு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு மற்றும் அயலாக்க கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளன.
சண்டிகரின் கிழக்கே உள்ள பஞ்ச்குலா நகர் அரியானா மாநிலத்தில் உள்ளது. மொகாலி, சண்டிகர், பஞ்ச்குலா வெவ்வேறு நிர்வாகங்களில் இருப்பினும் நிலப்பகுதிகள் இணைந்த பெருநகர் "சண்டிகர் மூநகர்" என வழங்கப்படுகிறது.
துடுப்பாட்ட விளையாட்டரங்கம்

1992ஆம் ஆண்டு பஞ்சாப் துடுப்பாட்ட சங்கம் (PCA) அதிநவீன வசதிகளுடன் மொகாலியின் சேறானப் பகுதியொன்றில் துடுப்பாட்ட விளையாட்டரங்க வளாகம் ஒன்று அமைக்கத் திட்டமிட்டது. இங்கு துடுப்பாட்ட விளையாட்டுத் திடலைத் தவிர உள்ளரங்க/வெளியரங்கப் பயிற்சித் திடல்கள், நீச்சல் வளாகம், டென்னிசு ஆடுகளங்கள், உயற்பயிற்சி அரங்கம், நூலகம்,மதுவசதியுடன் கூடிய உணவகங்கள் என ஓர் பெரும் திட்டத்ததிற்கான கட்டமைப்பில் பெருமளவு செலவு செய்தது. பஞ்சாபின் பெரும்பாலான துடுப்பாட்ட வீரர்கள் இங்குதான் பயிற்சி செய்கின்றனர். அவர்களில் சிலர்: யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங்,தினேஷ் மோங்கியா, மன்பிரீத் கோனி மற்றும் பஞ்சாப் துடுப்பாட்ட அணி.