மேலாண்மை
முகாமைத்துவம் அல்லது மேலாண்மை என்பது ஊழியர்களைக் கொண்டு அமைப்பொன்றினது (குறிப்பாக வணிகத்துறை) சகல வளங்களையும் பயனுறுதிமிக்க வண்ணம் முறைப்படுத்தி வழிநடத்திச்செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகளை விபரிக்கும் இயலாகும். அமைப்பொன்றில் இந்தகைய நடவடிக்கையினை மேற்கொள்ளுபவர் முகாமையாளர் (அ) மேலாளர் (manager) எனப்படுவார். இங்கு வளங்கள் எனப்படுவது அமைப்பொன்றில் காணப்படும் மனிதவளம், நிதி வளம், பொருண்மை வளம், புலமைசார் வளம், கட்புலனாகா வளம் ஆகிய வகைகளைக்குறிக்கும்.
வரைவிலக்கணம்
பல அறிஞர்கள் முகாமைத்துவத்திற்கு பலவித வரைவிலக்கணத்தினை அளித்துள்ளனர். என்றி ஃபயோல் (1841–1925) என்பவர் மேலாண்மை என்பது ஆறு வித செயல்களை உள்ளடக்கியதாக குறிப்பிட்டார்.[1] மேரி பார்க்கர் ஃபாலட் (1868–1933), என்பவர் முகாமைத்துவத்திற்கான வரைவிலக்கணத்தை "ஊழியர்களை கொண்டு கருமங்கள் ஆற்றுவிப்பது தொடர்பான செயற்பாடாடு" என முன்வைத்தார்.[2] எனினும் பலர் இந்த வரைவிலக்கணம் மிகவும் குறுகிய கண்ணோட்டம் கொண்டதாக கருதினர். "முகாமையாளர் என்ன செய்கின்றாரோ அதுவே முகாமைத்துவம்" எனும் சொற்றொடர் மேலாண்மையின் விரிந்த செயல்பாடுகளையும், காலத்துக்கு காலம் மாறி வரும் கருத்தினையும் குறிக்கிறது. இவற்றுக்கு காரணம் நிகழுலகில் முகாமைத்துவம் வளர்ந்துவரும் ஒரு துறையாக இருப்பது, முகாமைத்துவம் மட்டங்களுக்கிடையான ஆற்றப்படும் கருமங்களில் வேறுபாடு இருப்பதும் ஆகும். பொதுவாக நடைமுறையினில் நிர்வாகமும் (administration) முகாமைத்துவமும் ஒரே கருத்தினில் புழங்கப்படுகின்றது, ஆயினும் நிர்வாகம் என்பது உண்மையில் முகாமைத்துவத்திற்குள் அடங்கும் ஒர் பணியாகும். மேலாளர்கள் (Managers) ஒரு வேலையை அல்லது பணியை தாமே செய்வதில்லை மாறாக அவர்கள் அந்த பணியை யார் சிறப்பாக செய்ய முடியும் என்பதை முடிவு செய்து அவர்களிடம் அப்பணியை ஒப்படைக்கிறார். அவ்வாறு ஒப்படைப்பு பெற்ற நபரே அந்த பணியை செய்து முடிக்கிறார். மேலாளரை பொறுத்தவரை அந்த வேலை உரிய முறையில் செய்து முடிக்கப்படுகிறது.
திருவள்ளுவர் திருக்குறளில் தெரிந்துவினையாடல் என்ற அதிகாரத்தில் மேலாண்மை பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலாண்மையை விளக்கும் அந்த குறள்:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே இந்த குறளின் பொருளாக மு. வரதராசனார் குறிப்பிடுகிறார். இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக என்பது பரிமேலழகர் உரையாகும்.
முகாமைத்துவ கருமங்கள்
நிறுவனமொன்றின் நோக்கினை வெற்றிகரமாக அடையும் பொருட்டு முகாமைத்துவம் சில முக்கியமான கருமங்களை (functions) ஆற்றவேண்டியுள்ளது இத்தகைய கருமங்களே முகாமைத்துவ கருமங்கள் ஆகும். என்றி ஃபயோல் கருத்துப்படி:
- கணித்தல்
- திட்டமிடல் : எந்த செயலைச் செய்தாலும் செய்யத்தொடங்குவதற்கு முன்பாகவே அதனை எப்படிச் செய்வது, அதற்கான வளங்களை எங்கிருந்து பெறுவது பணிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பன பற்றியெல்லாம் முன்பே திட்டமிடுதல் அவசியம்.
- ஒழுங்கமைத்தல்: திட்டமிட்டுள்ள பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் (நிதி, மனித வளம், பொருட்கள், இயந்திரங்கள்) திரட்டுதல்.
- ஆணையிடுதல்
- இயைபாக்கல் : எந்த எந்தப் பணிகளை யார் யாரிடம் ஒப்படைக்கலாம் என்பது பற்றி முடிவு செய்தல்.இதனால் ஒரே பணியை இருவர் செய்வது அல்லது ஒரு பணியை யாருமே செய்யாமல் விட்டுவிடுவது போன்றவை தவிர்க்கப் படுகின்றன.
- கட்டுப்படுத்தல்
என்பன முகாமைத்துவ கருமங்களாகும். திட்டமிட்டப் பணிகளை ஒரு குறிப்பிட்ட பாதையில் செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்துகையில் பாதையில் இருந்து யாரேனும் அல்லது ஒரு சில பணிகளோ வழுவுவதாகத் தோன்றினால் அவற்றை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செலுத்துவது கட்டுப் படுத்துதல் எனப்படும். இவை தவிர ஊக்கப்படுத்தல், நெறிப்படுத்தல், ஊழியரிடல் போற்றவையும் முகாமைத்துவ கருமங்களாகக் எடுத்துக்கொள்ளளாம்.
முகாமைத்துவ செயற்பரப்புக்கள்
|
|
|
மேற்கோள்கள்
- Administration industrielle et générale - prévoyance organization - commandment, coordination – contrôle, Paris : Dunod, 1966
- Vocational Business: Training, Developing and Motivating People by Richard Barrett - Business & Economics - 2003 - Page 51