முதலாவது புக்கா ராயன்
புக்கா என அழைக்கப்படும் முதலாவது புக்கா ராயன் (கி.பி. 1356-1377) விஜயநகரப் பேரரசின் இரண்டாவது பேரரசன் ஆவான். தனது தமையனான முதலாம் ஹரிஹரருடன் சேர்ந்து விஜயநகரப் பேரரசை நிறுவியதில் இவனுக்குப் பெரும் பங்கு உண்டு. ஹரிஹரரின் ஆட்சிக்காலத்தில் அரசருக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருந்த புக்கா, ஹரிஹரரின் மறைவுக்குப் பின்னர் அரசனானான். இவன் சங்கம மரபைச் சேர்ந்தவன். இவனுடைய தொடக்ககால வாழ்க்கை பற்றி அதிகம் தெளிவில்லை. இது பற்றிப் பல கோட்பாடுகள் நிலவுகின்றன (விவரம் இங்கே). எவ்வாறாயினும், ஹரிஹரரும், புக்கா ராயனும் விஜயநகரப் பேரரசை நிறுவியதிலும், பின்னர் பெற்ற போர் வெற்றிகள் மூலமும் பெரும் புகழ் பெற்றனர். [1]
விஜயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
புக்கா ராயனின் இருபத்தோரு ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் எல்லைகள் தொடர்ந்து விரிவடைந்து சென்றன. இவன் தென்னிந்தியாவின் பல அரசுகளைத் தோற்கடித்து அங்கெல்லாம் தனது கட்டுப்பாட்டை நிறுவினான். ஆற்காட்டுச் சம்புவரையரும், கொண்டவிடு ரெட்டிகளும் 1360 இல் புக்கா ராயனிடம் தோற்றனர். 1371 இல் மதுரையில் இருந்த சுல்தானகத்தைத் தோற்கடித்துப் பேரரசின் எல்லைகளை தெற்கே இராமேஸ்வரம் வரை விரிவாக்கினான். புக்கா ராயனின் மகனான குமார கம்பண்ணனும் இவனது படையெடுப்புக்களில் கலந்து கொண்டது பற்றி, இவனது மனைவியான கங்காம்பிகாவினால் எழுதப்பட்ட மதுரா விஜயம் என்னும் சமஸ்கிருத நூலில் விளக்கப்பட்டுள்ளது. 1374 ஆம் ஆண்டளவில், பஹ்மானிகளுக்கு எதிராக துங்கபத்திரை - கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலத்தின் கட்டுப்பாடு தொடர்பில் இவனது பலம் அதிகரித்தது. இவன் கோவா, ஒரிஸ்ஸா ஆகிய அரசுகளையும் கைப்பற்றினான். இலங்கையில் யாழ்ப்பாண அரசு மற்றும் மலபார் அரசுகளிடமிருந்து திறையும் பெற்றான்.
புக்காவின் ஆட்சிக்காலத்தில், இவன் பஹ்மானி சுல்தான்களுடனும் மோதியுள்ளான். முதல் தடவை முதலாவது முஹம்மத்தின் காலத்திலும், பின்னர் முஜாஹித்தின் காலத்திலும் மோதல்கள் நிகழ்ந்தன. இவன் சீனாவுக்கும் தூதுவர்களை அனுப்பியதாகத் தெரிகிறது. புக்கா கி.பி. 1380 ஆம் ஆண்டளவில் காலமானான். இவனைத் தொடர்ந்து இரண்டாம் ஹரிஹர ராயன் ஆட்சிக்கு வந்தான். புக்காவின் காலத்திலேயே விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விஜயநகரம் ஆகியது. துங்கபத்திரையின் தென்கரையில் இருக்கும் இது முன்னைய தலைநகரான அனகொண்டியிலும் பாதுகாப்பானதாகும். இக்காலத்தில் நடைபெற்ற உள்நாட்டு முரண்பாடுகள், வெளி அரசுகளுடனான சண்டைகள் என்பவற்றுக்கு மத்தியிலும் புதிய நகரத்தை மேம்படுத்துவதில் புக்கா கவனம் செலுத்த முடிந்தது குறிப்பிடத் தக்கதாகும். பல இக்கியங்களும், சமய நூல்களும் இவன் காலத்தில் ஆக்கப்பட்டன. பல அறிஞர்கள், வித்தியாரண்யர், சாயனர் ஆகியோரின் வழிகாட்டல்களின் கீழ் இருந்து வந்தனர். வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் முதலிய இந்து நூல்களுக்கான சாயனருடைய உரைகள், புக்காவின் ஆதரவிலேயே எழுதப்பட்டன.