மாகே

மாகே (Mahé) அல்லது மய்யழி (Mayyazhi) என்பது இந்தியாவில் உள்ள ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனியாகும். இதன் மூன்று பக்கங்களும் கேரளாவினால் சூழப்பட்டுள்ளது. இது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தினைச் சேர்ந்தது. இதன் பரப்பு 9 சதுர கி.மீ ஆகும்.

மாகே
  நகரம்  
மாகே
இருப்பிடம்: மாகே
, புதுச்சேரி
அமைவிடம் 11°41′38″N 75°32′13″E
நாடு  இந்தியா
பிரதேசம் புதுச்சேரி
ஆளுநர் கிரண் பேடி[1]
முதலமைச்சர் வி. நாராயணசாமி[2]
மக்களவைத் தொகுதி மாகே
மக்கள் தொகை

அடர்த்தி

36,823 (2001)

4,091/km2 (10,596/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

9 சதுர கிலோமீட்டர்கள் (3.5 sq mi)

0 மீட்டர்கள் (0 ft)

இது கோழிக்கோட்டிலிருந்து 58 கிமீ தொலைவிலும் கண்ணூரிலிருந்து 24 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. தளிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை 17 இந்நகரின் வழியே செல்கிறது. மய்யழிப்புழா எனப்படும் மாகே ஆற்றின் கழிமுகத்தில் மாகே நகரம் உள்ளது.

பெயர்க்காரணம்

அழியூர் என்னும் கிராமத்தின் பகுதியாக இருந்தது மய்யழி. அழி என்றால் கடலும் புழையும் சேரும் இடம் என்று பொருள். மய்யம் என்றால் நடுவில் என்றொரு பொருளும் உண்டு. அழியூருக்கும் மற்றொரு ஊருக்கும் நடுவில் இருப்பதால் "மய்யழி" என்ற பெயரைப் பெற்றது எனவும் கூறுவர். பிரஞ்சுக்காரர் இந்நகரைக் கைப்பற்றியதிலிருந்து இது மாகே என்று அழைக்கப்பெற்றது.

அரசியல்

இது புதுச்சேரி சட்டமன்றத்துக்கு மாகி சட்டமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியப் பாராளுமன்றத் தேர்தலுக்கு புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.[3] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3]

உட்பிரிவுகள்

இங்கு ஐந்து வருவாய் கிராமங்கள் உள்ளன.

  1. மாகே
  2. சாலக்கரை
  3. பந்தக்கல்
  4. பல்லூர்
  5. செறுகல்லாயி
  6. செம்பிரை

மாகே நகராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. மேலுள்ள ஆறு ஊர்களே 15 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

புனித தெரேசா கத்தோலிக்க கோவில்

மாகே பிரஞ்சு ஆதிக்கத்தின்கீழ் இருந்தபோது அங்கு கட்டப்பட்ட கத்தோலிக்க கோவில் அவிலாவின் புனித தெரேசாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அங்கு கிறித்தவ சமயத்தைப் பரப்ப இத்தாலியிலிருந்து வந்த கார்மேல் சபைத் துறவி அருள்திரு தோமினிக் அக்கோவிலை 1736ஆம் ஆண்டில் கட்டினார்.[4] அக்கோவில் பற்றிய வரலாறு கீழ்க்கண்டவாறு கூறப்படுகிறது. புனித தெரேசாவின் திருவுருவத்தோடு வந்த ஒரு கப்பல் மாஹே கடலோரம் வந்தபோது திடீரென்று அங்கிருந்து நகர மறுத்துவிட்டதாம். அப்பகுதி மக்கள் புனித தெரேசாவின் திருவுருவத்தைத் தம் நகரில் நிறுவி, அதற்கு ஒரு கோவில் கட்டி எழுப்ப வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாகத் தெரிகிறது என்று கூறினராம். எனவே அத்திருவுருவம் கப்பலிலிருந்து இறக்கப்பட்டது. கப்பலும் நகரத் தொடங்கியது. புதிதாகக் கட்டிய கோவிலில் புனித தெரேசாவின் திருவுருவம் நிறுவப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் புனித தெரேசாவுக்கு விழாக் கொண்டாடப்படுகிறது.

அந்த விழாவில் கத்தோலிக்க கிறித்தவரும் பிற மதத்தினரும் கலந்துகொள்கின்றனர். புனித தெரேசாவின் திருவிழா அக்டோபர் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. மாகே நகரில் அத்திருவிழா அக்டோபர் 5ஆம் நாளிலிருந்து 22ஆம் நாள்வரை நிகழ்கின்றது. முக்கிய விழா நாள்கள் அக்டோபர் 14-15 ஆகும்.

மாகே நகரில் அமைந்த புனித தெரேசா கோவில் கேரளத்தின் கண்ணூர் மறைமாவட்டத்தின் பகுதியாக விளங்குகின்றது. அங்கு மலையாளம் பேசும் கத்தோலிக்கரும் தமிழ் பேசும் கத்தோலிக்கரும் உள்ளனர்.

வெளி இணைப்பு

மேற்கோள்கள்

  1. http://india.gov.in/govt/ltgovernor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  4. மாஹே நகரில் உள்ள புனித தெரேசா கோவில்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.