மரநாய்

மரநாய் (weasel) பறவைகளையும் எலிகளையும் தின்று வாழும் ஒரு பாலூட்டி வகையைச் சார்ந்த உயிரினம் ஆகும். இவ்விலங்குகள் அண்டார்க்டிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளைத் தவிர உலகெங்கும் வாழ்கின்றன. இவை மிக வேகமாக அழகான அமைப்பில் வளைகளை உருவாக்குகின்றன. மரநாய்களில் நீளவால் மரநாய், குட்டைவால் மரநாய், மிகச் சிறிய வால் மரநாய் என மூன்றுவகை உண்டு. நீளவால் மற்றும் மிகச்சிறிய வால் கொண்ட மரநாய்கள் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. குட்டைவால் மரநாய்கள் கனடாவில் அதிகமாக வாழ்கின்றன.

மரநாய்
Least Weasel
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: முதுகுநாணி
வரிசை: ஊனுண்ணி
துணைவரிசை: Caniformia
குடும்பம்: Mustelidae
துணைக்குடும்பம்: Mustelinae
பேரினம்: Mustela
லின்னேயஸ், 1758
இனம்

erinea africana
Mustela altaica
Mustela erminea
Mustela eversmannii
Mustela felipei
Mustela frenata
Mustela itatsi
Mustela kathiah
Mustela lutreola
Mustela lutreolina
Mustela nigripes
Mustela nivalis
Mustela nudipes
Mustela putorius
Mustela sibirica
Mustela strigidorsa
Mustela subpalmata

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் உயிரினங்களின் காப்பு நிலையை வகைப்படுத்தி வெளியிட்டு வரும் சிவப்புப் பட்டியலில் மரநாய் வகையில் காணப்படும் சில இனங்கள் இன அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.[1]

உடலமைப்பு

மரநாய்கள் பொதுவாக 12 முதல் 45 செ.மீ வரை (5அங்குலம் முதல் 18 அங்குலம்) நீளமுடையவை. பெண் மரநாயை விட ஆண் மரநாய் சற்று நீளமானதாக இருக்கும். இதன் வயிற்றுப்பகுதி வெண்மையானதாகவும் முதுகு பழுப்புநிறமுடைய முடிகளுடன் (ermine) மென்மையான புதர் போன்றும் இருக்கும். மரநாயின் வால் 15 செ.மீ முதல் 33 செ.மீ வரை நீளமானதாக இருக்கும்.

உணவு

சிறிய வகை உயிரினங்களான எலிகள், அணில், பூனை, பாம்பு, கோழிகள் அவற்றின் முட்டைகள், சிறிய முயல் ஆகியவற்றைக் கொன்று உண்ணும். இவை வேட்டையாடுவதில் மிகவும் வல்லவை. மெலிந்த உடல் காரணமாக இவை விரைவாக ஓடும். மிகச் சிறிய சந்துகளிலும் நுழைந்து செல்லும். மரநாய் மிகவும் தைரியமான விலங்கு ஆகும். இவை தமக்குப் பசி இல்லாத போதுகூட கிடைக்கும் உயிர்களைக் கொன்று அவற்றின் இரத்தத்தைச் சுவைக்கும் இயல்பு உடையது. இவைகளின் உணவில் 88% சுண்டெலிகளாக இருப்பதால் சுண்டெலிகளின் பெருக்கம் கட்டுப்பட்டுள்ளது. மரநாய் தன் எடையைவிட 40 மடங்கு அதிகமான உணவை எடுத்துக் கொள்ளும்.

வாழ்க்கை முறை

மரநாய் ஒரு முறைக்கு 4 முதல் 8 குட்டிகள் வரை ஈனும். குட்டிகளை 5 வாரங்கள் வரை மிகவும் கவனமாய்ப் பாதுகாக்கும். இவை தாய்ப் பாசம் மிக்கவை தன் குட்டிகளை ஆபத்திலிருந்து காக்க கடுமையாகப் போராடும். இவை அழுகிய மரங்களின் அடிப்பாகம், பாறைகள் ஆகியவற்றில் இருக்கும். இவைகள் அதிகமாக இரவு நேரங்களிலே தான் வேட்டையாடும். பகலில் தூங்கும் தன்மை கொண்டது. தென்னை மரம் பயிரிடப்படும் தமிழக்கத்தின் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணி போன்ற இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.[2] மரங்களில் விரைந்து ஏறும் ஆற்றலுடையவை. நன்றாக நீந்தவும் செய்யும். இவை இரையைக் கவர பலவிதமான ஒலிகளை எழுப்பக்கூடியவை.

வளை அமைப்பு

இதனுடைய வளை மிகவும் திட்டமிட்டு திறமையோடு அமைக்கப்பட்டது போல் இருக்கும். வளையின் வாய்ப்பாகம் புற்களுக்கு மத்தியில் இருக்கும். அது உலர்ந்த சருகுகளால் மூடப்பட்டிருக்கும். அதனுள் சென்றால் அது கிளை கிளையாக பிரிக்கப்பட்டிருக்கும். அது சுத்தமாகவும் இருக்கும். முதலில் அகலமான அறை வரவேற்பு அறை போன்றும் அதன் அருகே மெத்தைபோன்று மயிர்க்குவியலும் இருக்கும் அதற்கு அடுத்து, வளையின் மற்றொரு கிளை அதிலிருந்து மற்றொன்று எனச் சென்றால் மீன்டும் புறப்பட்ட இடத்திற்கே வரும். எதிரிகள் வளையுள் வந்தால் குழப்புவதற்காகவே இவ்வாறான வளைகளை இவை அமைக்கின்றன. அவ்வாறு வளை தோண்டும் மண்ணை இவை பக்கத்தில் சேர்த்து வைக்காமல் தற்காப்புக்காக தூர வீசி விடுகின்றன.

தோல் வேட்டை

வட குளிர் பிரதேசங்களில் வாழும் மரநாய்களின் தோல் (தற்காப்புக்காக) குளிர் காலத்தில் நிறம் மாறி வெண்மை நிறமுடையதாக மாறி விடுகின்றன. வெண்மை நிறமுடைய மயிர் நிறைந்த இதன் தோல் மிகவும் விலை மதிப்பு மிக்கது. எனவே மரநாய்கள் பொறிவைத்துப் பிடித்து வேட்டையாடப்படுகின்றன. இதன் தோலை அரச குடும்பத்தினரும் உயர் குடும்பத்தினரும் விரும்பி அணிந்து கொள்கின்றனர்.

உசாத்துணை

  • மலையமான் எழுதிய விலங்குகள் பலவிதம், ஒளிப்பதிப்பகம் வெளியீடு-1988
  • பத்மா ராஜ கோபால் எழுதிய உலக விலங்குகள். வள்ளுவர் பண்ணை வெளியீடு. 1969

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.