சென்னை மாநிலம்
சென்னை மாநிலம் (Madras State) இந்தியக் குடியரசில் ஒரு மாநிலம். இது தற்கால தமிழ்நாட்டின் முன்னோடியாகும். பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகாணம் என்று வழங்கப்பட்ட பகுதிகள், 1950 இல் இந்தியா குடியரசானவுடன் சென்னை மாநிலம் என்றழைப்படலாயின. 1950 முதல் 1953 வரை ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் அனைத்து பகுதிகளும் சென்னை மாநிலத்தில் இடம் பெற்றிருந்தன. இவையாவன - தற்கால தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திர மாவட்டங்கள், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டம் மற்றும் கேரளத்தின் மலபார் மாவட்டம். அக்டோபர் 1, 1953 இல் ஆந்திர மாவட்டம் சென்னை மாநிலத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமாகியது. 1956 இல் மொழி வாரியாக மாநிலங்களை அமைக்க மாநில புனரமைப்புச் சட்டம் (States Reorgansiation Act) கொண்டுவரப்பட்டது. இதனால் சென்னை மாநிலத்தின் கன்னடம் பேசும் பகுதிகள் கர்நாடக மாநிலத்துடனும், மலையாளம் பேசும் பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் பகுதியாக விளங்கிய நான்கு தாலுக்காக்களை உள்ளடக்கிய பகுதிகள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1959 இல் ஆந்திரப் பிரதேசத்துடன் ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின் மூலம் திருத்தணி சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. கண்டன் சங்கரலிங்க நாடார் சென்னை மாநிலம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்காக 78 நாட்கள் உண்ணா நோன்பிருந்து அக்டோபர் 13, 1956ல் உயிர் துறந்தார். 12 ஆண்டுகளுக்கு பிறகு 1968 இல் சென்னை மாநிலம் என்ற பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.