மண்ணரிப்பு
மண்ணரிப்பு என்பது, நிலத்தில் இருந்து, மேல் மண், நீரினாலும், காற்றினாலும் அரித்துச் செல்லப்படுவதைக் குறிக்கும். அண்மைக் காலங்களில், சூழலியல் மற்றும் வேளாண்மைத் துறைகளில் இது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டு வருகிறது.

மண்ணரிப்பு ஒரு இயற்கையான நடைமுறையே. சுமார் 450 மில்லியன் ஆண்டுகளாகவே இது நடைபெற்று வருகிற ஒன்று. ஆனால், பொதுவாக இயற்கையின் செயற்பாட்டின் போது, மேல் மண் புதிதாக உருவாகும் வேக அளவுக்கு ஈடாகவே அரிப்பும் நடைபெற்றது. மனிதனுடைய அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தச் சமநிலையைக் குழப்பிவிட்டன. இதனால் அரிப்பு வேகமாக நடைபெற்று வளமான நிலங்கள் இழக்கப்பட்டு வருகின்றன.
மண்ணரிப்பு, காற்றினாலும், நீரினாலும் ஏற்படலாம். வேகமாக வீசும் காற்று, நில மேற்பரப்பில் இருக்கும் தளர்வான மண்ணை அடித்துச் சென்றுவிடும். இது சம தரைகளிலும், சரிவான பகுதிகளிலும் ஏற்படலாம். நீரினால் ஏற்படும் அரிப்பு பொதுவாகச் சரிவான நிலங்களிலேயே நடைபெறுகின்றது. சரிவு கூடுதலாகும் போது அரிப்பும் கடுமையாக இருக்கும்.
பிரச்சினைக்கான காரணங்கள்
மண்ணரிப்புக்கான காரணங்கள் இடத்துக்கிடம், நாட்டுக்கு நாடு, கண்டத்துக்குக் கண்டம் வேறுபட்டிருப்பதைக் காணலாம்.
- மண்ணரிப்புக்கான இயற்கைக் காரணிகளாக, தளர்வான மண்ணின்மேல் கடுமையான மழை, வறட்சியால் தாவர வளர்ச்சி இல்லாது போதல், சரிவான நிலம், சடுதியான காலநிலை மாற்றம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
- மனித நடவடிக்கைகளோடு தொடர்புடைய முக்கிய காரணிகளாக, காடழிப்பு, அளவு மீறிய மேய்ப்பு, செறிவான வேளாண்மை, தொழில்மயமாக்கம், நகராக்கம் என்பவை விளங்குகின்றன.