பாவலர் சரித்திர தீபகம்

பாவலர் சரித்திர தீபகம் என்பது தமிழ் மொழியில் எழுதப்பட்ட தமிழ்ப் புலவர் வரலாற்றுத் தொகுப்பு நூல் ஆகும். The Galaxy of Tamil Poets என்ற ஆங்கிலத் துணைத்தலைப்பு ஒன்றும் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 1859 ல் சைமன் காசிச்செட்டி என்பரால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் புளூட்டாக் என்னும் நூலினைத் தழுவி எழுதப்பட்டதே இந்த நூல். தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புலவர் வரலாற்று நூல் இதுவே. இது யாழ்ப்பாணம், மானிப்பாயிலிருந்த "ஸ்ட்ரோங் அண்ட் அஷ்பரி" (Strong and Ashbury Printers) அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு 1886 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

பின்னணி

இந் நூலின் ஆசிரியர் இலங்கை, யாழ்ப்பாணம், நவாலி என்னும் ஊரைச் சேர்ந்த ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (ஜே. ஆர். ஆர்னோல்ட்) என்பவராவார். இவர் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயதாரகை என்னும் பத்திரிகையின் ஆசிரியரும், வட்டுக்கோட்டை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தமிழ் ஆசிரியருமாவார். சைமன் காசிச்செட்டியின் தமிழ் புளூட்டாக் நூலைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்ய ஆரம்பித்த சதாசிவம்பிள்ளை அதைப் புதிய தகவல்களுடன் விரிவு படுத்தினார்.

உள்ளடக்கம்

தமிழ் புளூட்டாக் நூலில் குறிப்பிடப்பட்ட 202 புலவர்களில் 201 புலவர்கள் பாவலர் சரித்திர தீபகத்திலும் இடம் பெறுகின்றனர். இவர்களைவிட மேலதிகமாக 209 புலவர்களைச் சேர்த்து 410 புலவர்கள் பற்றிய தகவல்கள் தரும் நூலாகப் பாவலர் சரித்திர தீபகம் ஆக்கப்பட்டுள்ளது. காசிச் செட்டியவர்களின் நூலில் 202 புலவர்களில் 13 பேர் மட்டுமே இலங்கையைச் சேர்ந்தவர்கள். சதாசிவம்பிள்ளை அவர்கள் மேலும் 69 இலங்கைப் புலவர்களைச் சேர்த்து ஈழத்துப் புலவர்களின் எண்ணிக்கையை 82 ஆக உயர்த்தினார்.

இரண்டாவது பதிப்பு

ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தினை பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் தொகுத்த முதலிரு பாகங்களும் 1975 இலும் 1979 இலும் கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்தன.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.