உதயதாரகை

உதயதாரகை ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையும், யாழ்ப்பாணத்தின் முதலாவது செய்திப் பத்திரிகையும் ஆகும்.[1] ஆகும். இது 1841 இல் அமெரிக்க மிஷன் மூலம் வெளியிடப்பட்டது. இப் பத்திரிகை உண்மையில், தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது.

முதல் ஆசிரியர்கள்

இதன் முதல் ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர். இதில் எழுதப்பட்ட ஆசிரியத் தலையங்கள் பலவும் ஹென்றி மார்ட்டினாலேயே எழுதப்பட்டதாகத் தெரிகிறது. பஞ்சதந்திரக் கதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உதயதாரகையில் வெளியிட்டார்.[2] இதற்கு முன்னர் இலங்கையில் தொடங்கப் பட்ட பத்திரிகைகள் அனைத்துக்கும் ஆங்கிலேயரே ஆசிரியர்களாக இருந்து வந்தனர். இதனால் இலங்கையரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை என்ற பெயரும் உதயதாரகைக்கே உரியது. கரோல் விசுவநாதபிள்ளை, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை ஆகியோரும் உதயதாரகையில் ஆசிரியராகப் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையின் நோக்கம்

உதயதாரகை முதல் இதழின் ஆசிரியத் தலையங்கத்தில், ".......உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்புகள்

  1. மார்ட்டின், ஜோன். எச்.; 2003. பக். 183.
  2. மார்ட்டின், ஜோன். எச்.; 2003. பக். 182.

உசாத்துணைகள்

  • கதிரேசு, எஸ்; A Hand Book to the Jaffna Peninsula and a souvenir of the opening of the railway to the North; யாழ்ப்பாணம், 1905, (மறுபதிப்பு: ஏசியன் அஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2004).
  • மார்ட்டின், ஜோன். எச்.; Notes on Jaffna, Chronological, Historical, Biographical; தெல்லிப்பழை, இலங்கை, 1923. (மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003).
  • ஜெபநேசன், எஸ்., இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்கன் மிஷனும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு 2007 (மீள்பதிப்பு)


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.