நேரி

நேரி என்னும் சங்ககால ஊர் இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது.

காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர் விறலியரை அழைத்துக்கொண்டு களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர மன்னனிடம் செல்வதாக ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவன் நேரி என்னும் ஊரில் இருந்தான். அந்த ஊர் நீர் சலசலக்கும் சிலம்பாற்றுப் பகுதியில் இருந்தது. நீர் இமிழ் சிலம்பின் நேரி இப்போதுள்ள ஐயப்பன் கோயில் சங்ககாலத்தில் அயிரைமலை என்னும் பெயருடன் திகழ்ந்தது. இங்குச் சிலம்பாறு ஓடுகிறது. இங்குச் சங்ககாலத்தில் இருந்த ஊர்தான் நேரி. [1]

நேரிமலையைக் கபிலர் “பாடுசால் நெடுவரை” எனக் குறிப்பிடுகிறார். பெருமை மிக்க ஊர் என்றும், பாடப்படுதலைக் கொண்ட ஊர் என்றும் இந்தத் தொடர் பொருள் தரும். சேர மன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் “நேரிப்பொருநன்” என்று குறிப்பிடுகிறார். நேரிமலையைப் போரிட்டு வென்றான் என்றும், நேரிமலையில் ஆடிப்பாடிக் களித்து வாழ்ந்து வந்தான் என்றும் இத்தொடருக்கு விளக்கம் காணமுடியும். [2] [3]

அடிக்குறிப்பு

  1. நேரியோன் – பதிற்றுப்பத்து 40-20
  2. (பொரு = போரிடு, பொருந் = பொருநர் போல் ஆடிப்பாடு)
  3. பாடுசால் நெடுவரைக் கல் உயர் நேரிப் பொருநன் – பதிற்றுப்பத்து 67-22
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.