நார்ட்வின்ட் நடவடிக்கை

நார்ட்வின்ட் நடவடிக்கை அல்லது நார்த்வின்ட் நடவடிக்கை (Operation Nordwind) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். ஜனவரி 1945ல் நடைபெற்ற இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பிரான்சின் அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க 7வது ஆர்மியினை அழிக்க முயன்று தோற்றன.

Operation North Wind
பல்ஜ் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி
நாள் ஜனவரி 1 - 25, 1945
இடம் அல்சேஸ் மற்றும் லொரெய்ன், பிரான்சு
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா
பிரான்சு
 நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
அலெக்சாந்தர் பாட்ச்
ஜான் டி லாட்ரே டி டஸ்சிக்னி
யோஹான்னஸ் பிளாஸ்கோவிட்ஸ்
ஹான்ஸ் வான் ஓப்ஸ்ட்ஃபெல்டர்
ஹைன்ரிச் ஹிம்லர்
சிக்ஃபிரைட் ராஸ்ப்
பலம்
7வது அமெரிக்க ஆர்மி
1வது பிரஞ்சு ஆர்மி
1வது ஜெர்மானிய ஆர்மி
19வது ஜெர்மானிய ஆர்மி

டிசம்பர் 1944ல் மேற்குப் போர்முனையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தோடு ஜெர்மனி பல்ஜ் தாக்குதலைத் தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்தபடி அதில் வெற்றி கிட்டவில்லை. டிசம்பர் இறுதியில் நேசநாட்டுப்படைகளின் எதிர்த்தாக்குதலால் ஜெர்மானியப் படைகளின் முன்னேற்றம் தடைபட்டது. இந்த இழுபறி நிலையினை மாற்ற பிரான்சின் அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க 7வது ஆர்மியைத் தாக்கி அழிக்க அடால்ஃப் ஹிட்லர் தன் படைகளுக்கு உத்தரவிட்டார். பல்ஜ் போர்முனைக்கு ஏற்கனவே 7வது ஆர்மியின் பல படைப்பிரிவுகள் அனுப்பப் பட்டிருந்ததால் அது பலவீனமான நிலையில் இருந்தது. அதனை முறியடித்து அழித்து விட்டால் பின்னர் பல்ஜ் போர்முனையில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க 3வது ஆர்மியைப் பின்புறமிருந்து தாக்கலாம் என்பது ஜெர்மானிய தளபதிகளின் திட்டம். இதற்கு நார்ட்வின்ட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டது

ஜனவரி 1ம் தேதி ஜெர்மானியத் தாக்குதல் தொடங்கியது. பலவீனமான அமெரிக்க 7வது ஆர்மியை பல இடங்களில் முறியடித்து, ஜெர்மனி ஆர்மி குரூப் ஜி யும், ஆர்மி குரூப் மேல் ரைனும் முன்னேறின. இரு வாரங்கள் நடந்த கடும் சண்டையில் அமெரிக்க 7வது ஆர்மி அழியும் நிலை உருவானது. அமெரிக்கப் படைகள் மோடர் ஆற்றின் தென்கரைக்குப் பின் வாங்கின. ஜனவரி மூன்றாம் வாரத்தில் பல்ஜ் முனையிலிருந்த படைப்பிரிவுகள் சிலவற்றை 7வது ஆர்மியின் துணைக்கு அனுப்பினார் நேச நாட்டு ஐரோப்பியத் தலைமைத் தளபதி டுவைட் டி. ஐசனாவர். ஜனவரி 25ம் தேதி போர்முனையை அடைந்த இப்படைகள் ஜெர்மானிய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தின. அமெரிக்க 7வது ஆர்மி அழிவிலிருந்து தப்பியது. நார்ட்வின்ட் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே வடமேற்கு ஐரோப்பாவில் உள்ள நேசநாட்டு வான்படைகளை அழிக்க ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே போடன்பிளாட் நடவடிக்கையை மேற்கொண்டது. நார்ட்வின்ட் சண்டையைப் போலவே அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

இச்சண்டையிலும் அடுத்து நிகழ்ந்த கோல்மார் இடைவெளிச் சண்டையிலும் ஏற்பட்ட ஜெர்மானியத் தோல்விகளால் தெற்கு பிரான்சு ஜெர்மானியர் ஆக்கிரமிப்பிலிருந்து முழுவதும் மீட்கப்பட்டது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.