தஞ்சாவூர் (கி.பி.600-1850) (நூல்)

தஞ்சாவூர் (கி.பி.600-1850) குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். கோட்டை தொடங்கி கோயில் வரை பல நூற்றாண்டு கால தஞ்சையின் வரலாற்றினை இந்நூலின் மூலம் அறியமுடிகிறது. ஆங்காங்கே இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகள், உரிய புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன. மோடி ஆவணக் குறிப்புகள் பற்றியும் ஆங்காங்கே விவாதிக்கப்படுகின்றன. தஞ்சாவூரின் பலவகையான பெருமைகளைப் பற்றிய நூல்.

தஞ்சாவூர் (கி.பி.600-1850)
நூல் பெயர்:தஞ்சாவூர் (கி.பி.600-1850)
ஆசிரியர்(கள்):குடவாயில் பாலசுப்ரமணியன்
வகை:தமிழ்
துறை:வரலாறு
இடம்:6, நிர்மலா நகர்,
வல்லம் சாலை,
தஞ்சாவூர் 613 007
மொழி:தமிழ்
பக்கங்கள்:362+18
பதிப்பகர்:அஞ்சனா பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு
1997.
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அமைப்பு

இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.

முதல் பகுதி

இப்பகுதியில் தஞ்சை என்னும் திருவூர், ஆழ்வார்கள் பார்வையில் தஞ்சை, முத்தரையர்களின் தலைநகரம் தஞ்சையே, சோழநாட்டுத் தலைநகரங்கள், விஜயாலய சோழன் கைப்பற்றிய தஞ்சை நகரம், தஞ்சை நிசும்பசூதனி, சோழர் காலத் தஞ்சாவூர், தஞ்சையில் சோழர் அரண்மனையும் பிற இடங்களும், கருவூர்த் தேவர் கண்ட தஞ்சை, தஞ்சாவூர் பெருவழிகள், தஞ்சாவூர் நகரின் பேரழிவு, தஞ்சையிலிருந்த சோழர் கால மருத்துவமனை, இராஜராஜனின் அரண்மனை இருந்த இடம் எது?, கல்வெட்டில் தஞ்சை நகரமும் மும்முடிச்சோழன் திருமதிலும், சோழர் காலத் தஞ்சாவூர் புதிய முடிவு, பாண்டியர் ஆட்சியில் தஞ்சாவூர், தஞ்சைத் திருக்கோயில்கள் (பல்லவ, சோழ, பாண்டிய காலம் வரை), விஜயநகரப் பேரரசின் காலத்தில் தஞ்சை, மராட்டியர் ஆட்சியில் தஞ்சாவூர் ஆங்கிலேயர் ஆட்சியில் தஞ்சை என்ற 20 தலைப்புக்களில் தஞ்சாவூர் நகரைப் பற்றி வரலாற்று நோக்கிலான கட்டுரைகள் காணப்படுகின்றன. தஞ்சை என்ற பெயர்க்குறிப்பை முதலில் பயன்படுத்தியவர் அப்பர், [1] விஜயாலய சோழன் ஏறத்தாழ கி.பி.850இல் தஞ்சை நகரைக் கைப்பற்றித் தனது தலைநகராக்கிக்கொள்ளல், [2] என்பது தொடங்கி பலவற்றை இப்பகுதியில் காணமுடிகிறது.

இரண்டாம் பகுதி

இரண்டாம் பகுதியில் தஞ்சை இராஜராஜேச்சரம் பற்றிய பதிவு உள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றி இப்பகுதியில் பன்முகநோக்கில் விவாதிக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் கோயில்களுக்குக் கற்கள் தஞ்சைக்கு அருகேயுள்ள உடையார்கோயில் கோயிலிலிருந்து கொண்டுவரப்பட்டது [3] என்பது உள்ளிட்ட அரிய தகவல்களை இப்பகுதியில் காணமுடிகிறது.

மூன்றாம் பகுதி

கடைசிப் பகுதியான மூன்றாம் பகுதியில் தஞ்சை நாயக்கர்கள் காலக்கோட்டையும் அரண்மனையும் மற்றும் தஞ்சை மராட்டியர் கோட்டையும் அரண்மனையும் என்ற தலைப்பிலான கட்டுரைகள் அமைந்துள்ளன.

ஆதாரங்கள்

  1. ஆறாம் திருமுறை, நாவுக்கரசர்
  2. SII, Vol III, No.205, Epigraphia Indica, XVIII No.4
  3. AR No.408/1902

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.