சூரன் போர்
சீவான்மா மும்மலங்களால் கட்டுப்பட்டது. இந்த அசுரப் பிடியிலிருந்து விடுதலை பெற்று முத்தியின்பத்தை அடைதலே ஆன்மாக்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கு. அசுரகுணங்களை அழித்து நன்னிலை அடைதலை குறியிட்டு நிற்கும் சடங்காக சூரன் போர் விளங்குகிறது.

புராணதத்துவம்
அசுரர்கள் தாம் செய்த தவ வலிமை காரணமாக வல்லமை பெற்று அந்த ஆணவ முனைப்பினால் நற்குணங்களுக்குப் பாத்திரமான தேவர்களை கொடுமைப்படுத்துகின்றனர். பல இன்னல்களைச் செய்கின்றனர். தேவர்களை இவிவின்னல்களிலிருந்து மீட்கும் தெய்வமாக முருகப் பெருமான் அசுரர்களை வதம் செய்து தேவர்களை மீட்கின்றார். புராணக் கதைகள் பாமர மக்களுக்கு மிகவுயரந்த தத்தவங்களை இலகுபடுத்தி விளக்க எழுந்தவையாகும். இங்கு மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயை என்பனவே அசுரர்களாக விபரிக்கப்படுகிறது. மாயைக்குத் தாரகாசுரனும், கன்மத்திற்கு சிங்கமுகாசுரனும், ஆணவத்திற்குச் சூரபத்துமனும் உருவகப்படுத்தப்படுகிறார்கள. இம்மும்மலங்களையும் திருவருட் சக்தியாகிய ஞானவேல் எனும் முருகன் திருக்கை வேல் அழித்து விடுகின்றது. ஆன்மா முத்தியின்பப் பேறினை பெற்றுய்ய வழிபிறக்கிறது.
சூரன் போர் கந்த சட்டி விரத்தின் இறுதிநாளில் சட்டித் திதி கூடிநிற்கும் மாலைப் பொழுதில் நிகழ்த்தப்படுகிறது.