அ. சிவசம்புப் புலவர்

அ. சிவசம்புப் புலவர் (1830 - செப்டம்பர் 29, 1910) இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். 1830 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையார் அம்பலவாணர் அருளம்பல முதலியார். தாயார் கதிராசிப் பிள்ளை. இவர் நல்லூரைச் சேர்ந்த சரவணமுத்துப் புலவரிடமும், பின்னர் அவரது மாணவரான சம்பந்தப் புலவரிடமும் தமிழ் கற்றார். தமிழ் இலக்கண நூல்களையும், சங்க இலக்கியம், இதிகாசங்கள் முதலியவற்றையும் முறையாகக் கற்றுத்தேர்ந்தார். இவருக்கு இளமையிலேயே கவிபாடும் திறன் வாய்த்திருந்தது. ஆறுமுக நாவலர் காலத்தில் வாழ்ந்த இவர் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்துள்ளார். இவர் 1910 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29 ஆம் தேதி காலமானார்.

இராமநாதபுரம் அரசர் இரவிகுல விஜய ரகுநாத பாஸ்கர சேதுபதி மீது கல்லாடக் கலித்துறை, நான்மணிமாலை, இரட்டை மணிமாலை போன்றவற்றையும், மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவர் மீது நான்மணி மாலையும் பாடியுள்ளார். அறுபது பிரபந்தங்கள் உட்படப் பல செய்யுள்களையும், மறையசையந்தாதியுரை, யாப்பருங்கலக்காரிகையுரை, கந்தபுரான வள்ளியம்மை திருமணப்படலவுரை போன்ற உரை நூல்களையும் இவர் ஆக்கியுள்ளார்[1].

பாடிய பிரபந்தங்கள்

திருச்செந்தில்யமகவந்தாதி
  • கந்தவனநாதர் பதிகம்,
  • வல்லிபுரநாதர் பதிகம்,
  • புலோலி நால்வர் நான்மணிமாலை
  • திருவேரக யமக அந்தாதி
  • புலோலி நான்மணிமாலை
  • திருச்செந்தில்யமகவந்தாதி,
  • எட்டிகுடி ஊஞ்சல் (1890)
  • எட்டிகுடி மும்மணிக் கோவை (1890)
  • எட்டிகுடிப் பதிகம்(1890)
  • வல்வைக் கலித்துறை

குறிப்புகள்

  1. நடராசன், க. கி., 2006, பக். 67

உசாத்துணை

  • நடராசன், க. கி., இந்தியா சென்று புகழ் நிறுவிய ஈழத்தமிழர், மோகனரங்கன், கோ. (தொகுப்பாளர்), ஈழத்தில் வளர்ந்த தமிழ், வசந்தா பதிப்பகம், சென்னை. 2006.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.