சாரல்நாடன்

சாரல்நாடன் என்ற பெயரில் எழுதிய கருப்பையா நல்லையா (இறப்பு: சூலை 31, 2014)[1] இலங்கையின் மலையக எழுத்தாளர்களுள் ஒருவர். மலையகம், மலையக இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சாரல் வெளியீட்டகம் என்ற பதிப்பகம் மூலம் நூல் வெளியீட்டிலும் ஈடுபட்டவர். சிறுகதை, புதினம், மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியவர். தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்தவர்.

சாரல்நாடன்
பிறப்புகருப்பையா நல்லையா
மே 9, 1944(1944-05-09)
சிங்காரவத்தை தோட்டம், சாமிமலை, இலங்கை
இறப்புசூலை 31, 2014(2014-07-31) (அகவை 70)
கண்டி, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்கருப்பையா, வீரம்மா
வாழ்க்கைத்
துணை
புஷ்பம்
பிள்ளைகள்ஸ்ரீகுமார், ஜீவகுமாரி

வாழ்க்கைச் சுருக்கம்

சாரல்நாடன் நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா, வீரம்மா ஆகியோருக்கு 1944 மே 9 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் நல்லையா. தந்தை தோட்டக் கணக்கப்பிள்ளையாகப் பணியாற்றியவர். அப்கொட் தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் தனது இடைநிலைக் கல்வியையும் கற்றார். கண்டி அசோக வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்து, பின்னர் ஆசிரியத் தொழிலை விட்டு பல்வேறு தொழில்களும் மேற்கொண்டு இறுதியில் தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் "டீ மேக்கர்" என்ற பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.[2]

எழுத்துலகில்

அட்டனில் படித்த போது பாடசாலை இதழ்களில் கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் மலைமுரசு, வீரகேசரி, தினகரன் இதழ்களில் எழுதத் தொடங்கினார்.[2] 1962 இல் வீரகேசரி நடத்திய மலையக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இவருடைய கால ஓட்டம் என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. புனைவுகளை விட இவரது ஆய்வு நூல்களே இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தது. மலையகத்தை மையமாக வைத்து இவர் 14 நூல்களை எழுதியுள்ளார்.

விருதுகள்

இவர் எழுதிய "தேசபக்தன் கோ. நடேசய்யர்'", "பத்திரிகையாளர் கோ. நடேசய்யர்" ஆகிய இரு நூல்களும் இலங்கை சாகித்திய விருதைப் பெற்றன. வீரகேசரி பத்திரிகை நடத்திய மலைநாட்டு எழுத்தாளர்களுக்கான முதலாவது சிறுகதைப் போட்டியில் இவரது "கால ஓட்டம்" என்ற சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றது.[3]

சாரல்நாடனின் நூல்கள்

  • மலையகத் தமிழர் (1990)
  • மலையக வாய்மொழி இலக்கியம் (1993)
  • மலைக் கொழுந்தி (சிறுகதைகள், 1994)
  • சி. வி. சில சிந்தனைகள் (1986)
  • தேசபக்தன் கோ. நடேசையர் (1988)
  • பத்திரிகையாளர் நடேசைய்யர் (1998)
  • மலையகம் வளர்த்த தமிழ் (1997)
  • இன்னொரு நூற்றாண்டுக்காய் (1999)
  • மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் (2000)
  • மலையகத் தமிழ்ர் வரலாறு (2004)
  • பேரேட்டில் சில பக்கங்கள் (2005)
  • பிணந்தின்னும் சாத்திரங்கள் (2002)
  • இளைஞர் தளபதி இரா. சிவலிங்கம் (2010)

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.