சந்திரோதயம் (ஓவியர்)
சந்திரோதயம் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் வாழ்பவர். இவர் சிறந்த ஓவியர் ஆவார். இவரது கணவர் ப.தங்கமும் சிறந்த ஓவியர்.
சித்திரக்கதைகளில் இவருக்குள்ள நாட்டம் ஈடு இணையற்றது. இவரது ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றனவாகும்.
கல்வி, பணி
கும்பகோணம் ஓவிய ஆசிரியர் குப்புசாமி ஐயரிடம் ஆறு ஆண்டுகள் ஓவியங்கள் கற்று, அரசின் டிப்ளமோ பெற்றவர். ஓவிய ஆசிரியர் பயிற்சியான டி.டி.சி முடித்து கும்பகோணம் செயிண்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஓவிய ஆசிரியராகப்ப் பணியாற்றி, பின்னர் தஞ்சாவூர் கிருத்துவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகள் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஓவியப்பயிற்சி
தன்னிடம் பயின்ற மாணவிகளுக்கு சிறப்பாக ஓவியப்பயிற்சி அளித்தவர். தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டு சிறப்பு மலரில் இவருடைய மாணவிகள் இருவர் வரைந்து தந்த ஓவியங்கள் முதல் மற்றும் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளன.
சித்திரக்கதை நூல்
உலகம் வியக்கும் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜனின் இளம் பருவத்தின் நிகழ்ச்சிகளை வரலாற்று அடிப்படையில் கற்பனை கலந்து ”மர்மவீரன் ராஜராஜசோழன்” என்ற தலைப்பில் ஒரு சித்திரக்கதையை எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். அடுத்து தன் கணவர் ஓவியர் தங்கத்துடன் இணைந்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை வைத்து இரண்டாம் ராஜராஜனின் வரலாற்றுப் பின்னணியில் ”ராஜகம்பீரன்” என்ற சித்திரக் கதையை வரைந்து நூலாக வெளியிட்டுள்ளார்.
ஓவியங்கள்
இவர், தனது கணவருடன் ஓவியங்கள் வரைந்துள்ளார். அவற்றுள் கீழ்க்கண்டவை குறிப்பிடத்தக்கனவாகும். இவருடைய அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்க, இந்திய, தமிழ் நண்பர்களுக்கு 60க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து தந்துள்ளார்.
- தஞ்சாவூர் பெரிய கோயிலில் சரஸ்வதி, பிரஹ்ஹன் நாயகி, வராகியம்மன் ஓவியங்கள்
- புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மாரியம்மன் ஓவியம்
- திருவையாறு தியாகராஜர் சன்னதியில் உஞ்சிவிருத்தி தோற்றத்தில் தியாகராஜர் ஓவியம்