அகுமதிய்யா முசுலிம் சமூகம்
அகுமதிய்யா முசுலிம் சமூகம் அல்லது அஃகுமதிய்யா முசிலிம் சமாஅத் அல்லது சமாஅத் அஃகுமதிய்யா (Ahmadiyya Muslim Community, Jama'at Ahmadiyya, அரபு மொழி: الجماعة الأحمدية المسلمة, al-Jamā'a al-Ahmadīya al-Muslima, உருது: احمدیہ جماعت) என்பது 1889 ஆம் ஆண்டில் அம்ரித்சரைச் சேர்ந்த மிர்சா குலாம் அகமது (1835-1908) என்பவரால் நிறுவப்பட்ட அகமதியா இயக்கத்தில் இருந்து உருவான இரண்டு பிரிவுகளில் ஒன்றாகும். நிறுவனரின் இறப்புக்குப் பின்னர் அகுமதிய்யா இயக்கம் இரண்டாகப் பிரிந்தது. மற்றைய சமூகம் இலாகூர் அகுமதிய்யா இயக்கம் என அழைக்கப்படுகிறது. இப்பிரிவினர் “காதியானிக்கள்” என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் இச்சொல் தங்களை இழிவு படுத்துவதாகக் கூறுகின்றனர். (காதியான் என்பது மிர்சா குலாம் அகமது பிறந்த ஊர்).[1]
இவர்கள் மிர்சா குலாம் அகமதை இறைத்தூதர் எனக்கூறுவதால் மற்ற இசுலாமிய பிரிவுகளான சியா இசுலாம் சுன்னி இசுலாம் இவர்களை முசுலிம்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அகுமதிய்யா முசுலிம் சமூகத்திற்கு மிர்சா மசுரூர் அகமது என்பவர் இப்போது தலைவராக உள்ளார். இன்று இந்த இயக்கம் உலகளாவிய அளவில் 198 நாடுகளில் இவரது தலைமையின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னை, சாத்தான்குளம், மேலப்பாளையம் போன்ற சுமார் 22 இடங்களில் இந்த இயக்கம் செயல்பட்டு வருகின்றது.