காசி ஆனந்தன்
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் (பிறப்பு: 1938, மட்டக்களப்பு, இயற்பெயர்: காத்தமுத்து சிவானந்தன்) ஈழத்து எழுச்சிக் கவிஞர். இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர்.
காசி ஆனந்தன் | |
---|---|
![]() | |
பிறப்பு | 1938 மட்டக்களப்பு |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
இளமைக் காலம்
மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். வாகன இலக்கத்தகடுகளிலேயே சிங்கள எழுத்துக்கள் இருக்கக்கூடாது என்று அவற்றை அகற்றும் போராட்டத்திலும் பாடசாலை பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழி இருக்கக்கூடாது என்றும் போராட்டம் செய்து காவலர்களால் கைதாகி சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்.
போராட்டத்தில் இணைவு
பின்னர் தமிழ் நாடு சென்று சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் உயர் கல்வி கற்கும் வேளையில் அங்கு பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் 1963இல் இலங்கை திரும்பி இலங்கை அரச மொழித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்தார். 1972 இல் இலங்கை குடியரசாக மாறியபோது அதன் தமிழ் எதிர்ப்புக் கொள்கையோடு ஒத்து வராததால் அரசுப் பணியிலிருந்து விலகி ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு துணை நின்றார். இவர் இலங்கையில் ஐந்து சிறைகளில் சுமார் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.
தமிழகத்தில்
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான காலப்பகுதியில் பேச்சுக்களுக்காக விடுதலைப்புலிகள் இந்தியா சென்றபோது காசியும் இந்தியா சென்றார். விடுதலைப்புலிகளின் அரசியல் விவகாரக்குழுவின் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்காலப்பகுதியில் இந்தியாவில் ராஜீவ் அரசுடனான பேச்சுக்குழுவில் விடுதலைப்புலிகள் தரப்பு சார்பாளர்களில் ஒருவராக காசி சென்றார்.
மாமனிதர் விருது
பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல் கொடுத்தவண்ணமுள்ளார். ஈழப்போராட்ட காலத்தின் இக்கட்டான காலப்பகுதிகளில் தோளோடு தோள் நின்ற இவருக்கு தமிழீழத்தின் அதிஉயர் விருதான மாமனிதர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். காசி ஆனந்தன் உயிர் தமிழுக்கு, தமிழன் கனவு, தெருப்புலவர் சுவர்க்கவிகள் உட்பட பல கவிதை நூல்களைத் தந்துள்ளார்.
நூல்கள்
கவிதைத் தொகுப்புகள்
- தெருப்புலவர்
- உயிர் தமிழுக்கு – 1961
- தமிழன் கனவு – 1970
- காசி ஆனந்தன் கவிதைகள் - 1981 (பாகம் 1, 2)
- சுவர்க்கவிகள் - உட்பட பல கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார்.
சிறுகதைகள்
- காசி ஆனந்தன் கதைகள்
- நறுக்குகள்