கன்னியா வெந்நீரூற்று

கன்னியா வெந்நீரூற்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை வெந்நீரூற்று ஆகும். குறிப்பிட்ட அந்த இடத்தில் 90 - 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகள் அமைந்துள்ளன. இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெந்நீரூற்றில், நாளடைவில் செயற்கைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிணற்றிலுமிருந்து வெவ்வேறு வெப்பநிலையில் நீர் ஊறி வந்து கொண்டிருக்கும். உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் இந்த வெந்நீரூற்று இலங்கையில் நடந்த உள்நாட்டுப் பிரச்சனைக் காலத்தின் போது களையிழந்து காணப்பட்டது. ஆயினும் போர் முடிவுற்றதன் பின்னர் தற்போது அதிகமாக உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் ஒரு சுற்றுலாத் தலமாக இந்த கிணறுகள் திகழ்கின்றன. போர் முடிவுற்றதன் பின்னர் இந்த உல்லாசப் பிரயாண மையத்தைச் சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் நடைபெறுவதாகச் சிலர் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர் [1]. வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் தமிழ் மொழியிலும் செய்தியைக் கொண்டிருந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டு, ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே செய்தியைக் கொண்ட அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கே விநியோகிக்கப்படும் நுழைவுச் சீட்டில் அந்தப் பிரதேசம் ஒரு பெளத்தமதப் பிரதேசம் எனவும் அறியத் தரப்பட்டுள்ளது.

வரலாறு

தமிழ் வரலாற்றின் படி, பத்துத் தலை படைத்த இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கிரியைகள் செய்வதற்காக உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாகவும் அந்த இடங்களில் இந்த வெந்நீர் ஊற்று உருவாகியதாகவும் ஐதீகம் உண்டு.

தற்போதைய நிலை

தற்போது பெருமளவு சுற்றுலாப் பயணிகள் இங்கு சென்று நீராடுகின்றனர். எனினும் உல்லாசப்பயணிகள் நீராடும் அளவுக்கு போதியளவு நீர் அங்கு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது[2][3].

இலக்கியம்

கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகள் பற்றிய நவாலியூர் சோமசுந்தரப் புலவரது ஒரு பாடல்:

காதலனை பிரிந்தவளின் மனம் போல ஒன்று

கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று
தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று
செய்த பிழைக் கலங்குபவன் மனம் போல ஒன்று
நீதி பெறா வேழைதுயர் மனம் போல ஒன்று
நிறைபழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று
காது மழுக் காறுடையான் மனம் போல ஒன்று
கனலேறு மெழு நீர்கள் உண்டு கன்னி யாயில்

இவற்றையும் காணவும்

குறிப்புகள்

  1. பறிபோகும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசமும் பிழைப்புவாத தமிழ் அரசியல் தலைமைகளும்! : பி.எஸ்.குமாரன் http://inioru.com/?p=14730
  2. கன்னியா வெந்நீரூற்றில் போதிய தண்ணீரில்லை : உல்லாசப்பயணிகள் கவலை, வீரகேசரி, செப்டம்பர் 2, 2010
  3. புனிதத் தன்மையை இழந்து வரும் திருமலை கன்னியா ஊற்று!
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.