ஏனாதி

ஏனாதி என்பது சேனாபதியைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்ச்சொல். போரில் மதிலின்மீது ஏறுதல் ‘ஏணி’ எனப்படும். இதனைத் தொல்காப்பியம் “மடையமை ஏணிமிசை மயக்கம்” எனக் குறிப்பிடுகிறது. இது உழிஞைத்திணையின் துறைகளில் ஒன்று.

ஏ என்னும் சொல் அம்பைக் குறிக்கும்.
ஏ+ஆதி=ஏனாதி. இதில் ‘ன்’ என்பது சாரியை.
ஆ+நிரை=ஆனிரை என வருவதை இதனோடு ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளலாம்.
இவற்றைப்போலக் கா என்பது கான் என்றும், ஊ எனபது ஊன் என்றும், மா என்பது மான் என்றும், தே எனபது தேன் என்றும் வருவனவற்றையெல்லாம் இங்குப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

வில்லாண்மையில் சிறந்தவன் என்னும் பொருளில் இந்த ஏனாதி என்னும் பட்டம் சங்ககால மன்னர்களால் வழங்கப்பட்டது. ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆகியோர் ஏனாதி பட்டம் பெற்ற படைத்தலைவர்கள்

காவிதி என்பது சிறந்த உழவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். நாயகன் என்பது சிறந்த கடல்வணிகனுக்கு வழங்கப்பட்ட பட்டம். எட்டி என்பது சிறந்த உள்நாட்டு வணிகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். இது இக்காலத்தில் செட்டி என மருவியுள்ளது.

எட்டி < செட்டி என்பது போல ஏனாதி < சேனாதி, சேனாபதி என்னும் மரூஉ தோன்றியுள்ளது.

ஏனாதி பட்டம் பெற்றவர்கள்

சோழிய ஏனாதி திருக்குட்டுவன்
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்
ஏனாதி திருக்கிள்ளி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.