எம். சுகுமாரன்

எம். சுகுமாரன் (M. Sukumaran) (1943–2018) என்பவர், இந்திய மலையாள இலக்கியத்தின் எழுத்தாளர் ஆவார். அவரது புதினங்கள் மற்றும் சிறுகதைகளில் காணப்படும் அரசியல் எழுத்துக்களுக்காக மிகவும் பிரபலமானவர். அவரது படைப்புகளில் மரிச்சிட்டிலதவரது ஸ்மாரகங்கல், சேஷக்ரியா, சுவன்னா சின்னங்கள் மற்றும் ஜனிதகம்" ஆகியவை முக்கிய இடம்பெற்றுள்ளன. மேலும் அவரது ஐந்து கதைகள் திரைப்படங்களாகத் தழுவப்பட்டுள்ளன. சிறந்த கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதை இரண்டு முறை பெற்ற சுகுமாரன் 1976 ஆம் ஆண்டில் கதைக்கான கேரள சாகித்ய அகாதமி விருதையும் 2006 இல் சாகித்ய அகாதமி விருதையும் பெற்றார்.

சுயசரிதை

எம் சுகுமாரன் 1943 இல் தென்னிந்திய மாநிலமான கேரளாவில், பாலக்காடு மாவட்டத்திலுள்ள சித்தூரில் நாராயண மண்ணடியார் மற்றும் மீனாட்சி அம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். [1] பள்ளி கல்வியை முடித்த பின்னர், சர்க்கரை ஆலையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். [2] 1963 இல் திருவனந்தபுரத்திற்குச் [3] சென்ற அவர், கணக்காளர் நாயகம் அலுவலகத்தில் ஒரு எழுத்தராக பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் தீவிரமாக இருந்தார். அவரது அரசியல் நடவடிக்கைகள் 1974 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்ய வழிவகுத்தது. [4] [5] ஒரு மத்திய அரசு ஊழியர் குடியரசுத் தலைவரின் உத்தரவால் பணிநீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். [6] பின்னர், அவர் இடதுசாரி அரசியலில் ஏமாற்றமடைந்ததாகவும், ஏமாற்றமடைந்த ஒரு அரசியல்வாதியை அவரது புதினமான சேசக்ரியாவில் சித்தரித்ததன் விளைவாகவும் 1982 ல் அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். [7]

சுகுமாரன் மீனாட்சி என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு ரஜனி என்ற மகள் இருக்கிறார். [8] திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், மார்ச் 16, 2018 அன்று, 75 வயதில், இதய தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும்போது இறந்தார். [6] இவரது மகள் ரஜனி, ஒரு எழுத்தாளராக உள்ளார். [3] அவர், ரஜனி மண்ணடியார் என்கிற பெயரில் எழுதுகிறார். [9]

மரபுரிமை

16 வயதிலிருந்தே எழுதத் தொடங்கியதாக அறியப்பட்ட சுகுமாரன், தனது முதல் கதையான மழைத்துளிகளை 1963 ஆம் ஆண்டில் மலையாள மனோரமாவில் தன்னுடைய 20வது வயதில் வெளியிட்டார். [3] அவர் இறக்கும் வரை தொடர்ந்து எழுதினார். அவ்வப்போது நீண்ட இடைவெளிகளை எடுத்துக் கொண்டார். அவர், மூன்று புதினங்களையும், 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் வெளியிட்டார், இதில் சேசக்ரியா, சுவன்னா சின்னங்கள், ஜனிதகம், தூக்குமரங்கள் நெஞ்சங்களுக்கு, மரிச்சிட்டிலாதவருடே ஸ்மாரகங்கள், பாரா, ஆழிமுகம் மற்றும் வஞ்சிக்குனம்பதி ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. [10] அவரது ஐந்து கதைகள் திரைப்படங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதாவது. சங்ககானம், சேசக்ரியா, கழகம், மார்கம் மற்றும் உனர்த்துபட்டு போன்ற கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. [11] இதில், அவர் சேசக்ரியாவிற்கு திரைக்கதை எழுதினார். [12] மகாசரிதங்களினூடே என்ற சுயசரிதை தொடரின் ஒரு பகுதியாக சுதேசபிமாணி இராமகிருஷ்ண பிள்ளை, கே கேளப்பன் மற்றும் முகமது அப்துர் ரகுமான் ஆகியோரின் சுயசரிதைகளை உள்ளடக்கிய சுதேசபிமானி, கேளப்பன், அப்துர் ரகுமான் என்ற வாழ்க்கை வரலாற்று புத்தகத்தையும் அவர் எழுதினார்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

சுகுமாரன் 1976 ஆம் ஆண்டில் கேரள சாகித்ய அகாதமி விருதை தனது மரிச்சிட்டில்லதவருதெ ஸ்மாரகம்" என்கிற சிறுகதைத் தொகுப்பிற்குப் பெற்றார். [13] 1981 ஆம் ஆண்டில் சேசக்ரியா திரைப்படத்திற்காக, சிறந்த கதைக்கான தனது முதல் கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார். [14] 1995 ஆம் ஆண்டில் கழகம் படத்திற்காக அவர் மீண்டும் விருதைப் பெற்றார். [15] இடையில், பித்ரு தர்ப்பணம்" என்ற தனது புத்தகத்திற்காக, பத்மராஜன் தொடக்க விருதைப் பெற்றார். [16] கேரள சாகித்ய அகாதமி 2003 இல் அவரின் ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்கான கேரள சாகித்ய அகாதமி விருதை 2003 இல் மீண்டும் வழங்கி கௌரவித்தது. [17] சாகித்ய அகாதமி அவரது சிறுகதைத் தொகுப்பான சுவன்னா சின்னங்களை 2006 ஆம் ஆண்டில் ஆண்டு விருதுக்கு தேர்ந்தெடுத்தது. [18]

குறிப்புகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.