என். வரதராஜன்

என். வரதராஜன் (பிறப்பு: 1924, இறப்பு: ஏப்ரல் 10, 2012[1]) தமிழக அரசியல்வாதி மற்றும் இந்திய பொதுவுடமை மார்க்சிய கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளரும் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் ஆவார்.

என். வரதராசன்
பிறப்புவரதராஜன்
திண்டுக்கல், தமிழ்நாடு
இறப்புஏப்ரல் 10,2012 (அகவை 81)
சென்னை
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி
அறியப்படுவதுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்
வாழ்க்கைத்
துணை
ஜெகதாம்பாள்
பிள்ளைகள்கல்யாண சுந்தரம்,
பாரதி

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் பாளையம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியில் பிறந்தார். திண்டுக்கல்லில் பஞ்சாலைத் தொழிலாளியாக தனது வாழ்க்கையை துவக்கினார். இவருக்கு ஜெகதாம்பாள் என்ற மனைவியும், கல்யாணசுந்தரம், பாரதி ஆகிய மகன்களும் உள்ளனர். கல்யாணசுந்தரம் திண்டுக்கல் நகராட்சியின் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார்.

அரசியல் வாழ்க்கை

மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர்.1954-ல் மதுரை ஜில்லா போர்டு உறுப்பினராகவும், 1967ம் ஆண்டு வேடசந்தூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1977[2] மற்றும் 1980[3] ஆண்டுகளில் திண்டுக்கல் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943ல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் பின்பு 1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது அதில் தன்னை இணைத்துக் கொண்டு மதுரை மாவட்டச் செயலாளராக, மாநிலக்குழு உறுப்பினராக, மத்தியக்குழு உறுப்பினராக பணியாற்றியவர். 2001லிருந்து 2010 வரை மூன்று முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர்.

போராட்டங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பலகட்ட போராட்டங்களில் பங்கேற்றும், தலைமையேற்றும் மூன்று ஆண்டுகள் சிறை வாழ்க்கை அனுபவித்தார். கட்சியின் மீது அடக்குமுறை ஏவப்பட்ட காலத்தில் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றியவர். தமிழகத்தில் உள்ள சாதாரண ஏழை, எளிய மக்களின் சமூக மேம்பாட்டிற்காகவும், தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் போராடியும், மதுரை, உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அகற்ற பாடுபட்டவர். இந்தப் போராட்டங்களுக்கு தலைமையேற்று நடத்தியவர்.

அருந்ததிய மக்களின் இடஒதுக்கீட்டுக்கான போராட்டம்

அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. இந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்று வழி நடத்தியவர். இப்போராட்டத்தின் காரணமாகவே தமிழக அரசு அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகித உள்இடஒதுக்கீடு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இறப்பு

2012 ஏப்ரல் மாதம் 10 ஆம் தியதியன்று காலமானார்.[4]

மேற்கோள்கள்

  1. "சிபிஎம் வரதராஜன் காலமானார்". பிபிசி (ஏப்ரல் 10, 2012). பார்த்த நாள் ஏப்ரல் 10, 2012.
  2. 1977 தமிழக தேர்தல் முடிவுகள்
  3. 1980 தமிழக தேர்தல் முடிவுகள்
  4. http://www.thehindu.com/news/national/tamil-nadu/cpim-leader-varadarajan-passes-away/article3299966.ece/amp/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.