உரிமை

சட்டமெய்யியல், சட்டம் ஆகியவற்றில், உரிமை (Rights) என்பது, ஒரு பண்பட்ட சமுதாயத்தில், சட்டப்படி அல்லது ஒழுக்கநெறிப்படி; செயல், பொருள், ஏற்றுக்கொள்ளல் என்பவை தொடர்பில்; செய்தல் அல்லது செய்யாமல் இருத்தல், பெறுதல் அல்லது பெறாமல் இருத்தல் என்பவற்றுக்கான உரித்து ஆகும். உரிமைகள் மக்களிடையேயான தொடர்பாடலுக்கான விதிகளாக அமைவதால், அவை தனிமனிதர் மீதும், குழுக்கள் மீதும் கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன. எடுத்துக் காட்டாக ஒருவருக்கு வாழும் உரிமை உண்டெனில், மற்றவர்களுக்கு அவரைக் கொல்லும் சுதந்திரம் கிடையாது.

உரிமைகள் குறித்த மிகப் பிந்திய கருத்துருக்கள், எல்லாம்தழுவிய சமத்துவ நோக்கம் கொண்டவை. அதாவது, எல்லோருக்கும் சம உரிமை என்பவை. உரிமைகள் தொடர்பாக தற்காலத்தில் இரண்டு முக்கியமான கருத்துருக்கள் நிலவுகின்றன. ஒன்று, இயல்புரிமை என்னும் கருத்துரு ஆகும். இது, சில உரிமைகள் இயற்கையாக அமைந்தவை அதில் எந்த மனித சக்தியும் முறையாக மாற்றம் செய்ய முடியாது என்கிறது. இரண்டாவது, சட்ட உரிமை என்னும் கருத்துரு. இது, உரிமை என்பது சமுதாயத்தால் ஆக்கப்படுவதும், அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படுவதும், மாற்றங்களுக்கு உட்படக்கூடியதுமான மனித உருவாக்கம் என்கிறது.

மாறாக, பெரும்பாலான முற்காலத்து உரிமை தொடர்பான கருத்துருக்கள் படிமுறை அமைப்புக் கொண்டவை. இவற்றின்படி, தகுதி அடிப்படையில் மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. சிலருக்கு மற்றவர்களிலும் அதிகமான உரிமைகள் வழங்கப்பட்டன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.