இலங்கை இனக்கலவரம், 1958
இலங்கை இனக்கலவரம், 1958 (1958 riots in Ceylon) என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும். இவ்வன்முறைகள் 1958 மே 22 முதல் மே 27 வரை இடம்பெற்றன. ஆனாலும், 1958 சூன் 1 இல் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும் ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வு பொதுவாக இனக்கலவரம் என அழைக்கப்பட்டாலும், சில இடங்களில் இனவழிப்பாகவே நடத்தப்பட்டது.[2] இவ்வழிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை[3] கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு 70 முதல் 300 வரையென அறிவிக்கப்பட்டது.[1] இக்கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள் ஆயினும், தமிழர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்த காரணத்தினால் சில சிங்களவர்களின் உடமைகளும் சேதமாக்கப்பட்டன. அத்துடன், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் பகுதிகளில் சிங்களவர்கள் சிலர் தமிழர்களால் தாக்கப்பட்டனர்.[2]
1958 இலங்கை இனக்கலவரம் 1958 riots in Ceylon | |
---|---|
![]() இலங்கையின் அமைவிடம் | |
இடம் | இலங்கை மேலாட்சி |
நாள் | மே, சூன் 1958 (+6 GMT) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | முக்கியமாக தமிழர்l மற்றும் சில சிங்களப் பொதுமக்கள் |
தாக்குதல் வகை | வெட்டிக் கொலை, எரிப்பு, கத்திக் குத்து |
ஆயுதம் | கத்திகள், பொல்லுகள், நெருப்பு |
இறப்பு(கள்) | 300[1] |
காயமடைந்தோர் | 1000+ |
பின்புலம்
1956 ஆம் ஆண்டில் சாலமன் பண்டாரநாயக்கா பெரும்பான்மை சிங்களமயமாக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றினார். புதிய அரசு சிங்கள மொழியை நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக அறிவித்து தனிச் சிங்களச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இலங்கையின் கால்வாசிக்கும் அதிகமானோர் தமிழ் பேசுபவர்களாக இருந்தனர். இச்சட்டம் தமிழர்களிடையே எதிர்ப்பைத் தூண்டி விட்டது. தமது, மொழி, கலாச்சாரம், பொருளாதார நிலை இதனால் பாதிக்கப்படும் என அவர்கள் அஞ்சினர்.[4]
தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் அறப்போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் இனங்களுக்கிடையே முறுகல் நிலை அதிகரித்தது. இலங்கையின் கிழக்கே கல்லோயா நகரில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[1] இதனை அடுத்து பிரதமர் பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், இதன் மூலம் பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் 1957 ஆம் ஆண்டில் பிரதமருக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழும் நிருவாக மொழியாக இருக்க உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும், சிங்களத் தேசியவாதிகள், மற்றும் பௌத்த துறவிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயவர்தனா தலைமையில் கண்டிக்கு நடைப் பயணம் மேற்கொண்டனர்.[4][5][6] இவ்வெதிர்ப்பை அடுத்து, பண்டாரநாயக்கா அரசு பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தது.
இதற்கிடையில், பிரித்தானியக் அரச கடற்படையினர் தமது திருகோணமலைத் தளத்தை மூடியதை அடுத்து 400 தமிழ்த் தொழிலாளர்கள் பணியிழந்தார்கள். இவர்களை சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பொலன்னறுவை மாவட்டத்தில் குடியமர்த்த அரசு திட்டமிட்டது. இந்நடவடிக்கை அம்மாவட்டத்தில் உள்ள சிங்களவர் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியது. சிங்களக் கும்பலகள் அங்கு உருவாகி அங்கு குடியேற வந்த தமிழர்களைத் தாக்கத் தொடங்கியது.[7]
நெருக்கடிநிலை 56 - நூல்
"Emergency '58 : the story of the Ceylon race riots" என்ற நூல் தார்சி வித்தாச்சி என்ற ஊடகவியலாளரால் இந்தக் கலவரங்கள் பற்றி எழுதப்பட்டது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- "An evolving army and its role through time". The Sunday Times. 16 October 2005. http://sundaytimes.lk/051016/plus/4.html. பார்த்த நாள்: 29 அக். 2008.
- Roberts, M. Exploring Confrontation: Sri Lanka: Politics, Culture and History , p.331
- Chattopadhyaya, H. Ethnic Unrest in Modern Sri Lanka: An Account of Tamil-Sinhalese Race Relations, p. 54
- Vittachi, T. Emergency '58: The Story of the Ceylon Race Riots , pp. 2–8
- Bartholomeusz, T. In Defence of Dharma: Just-War Ideology in Buddhist Sri Lanka, pp. 93–94
- "DBS Jeyaraj, 'JR’s Kandy March and the tale of "Imbulgoda Veeraya"', The Nation, 4 November 2007.". மூல முகவரியிலிருந்து 6 June 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 June 2009.
- Vittachi, T. Emergency '58: The Story of the Ceylon Race Riots , p. 10