ச. இராமதாசு
ச. இராமதாசு (ராமதாஸ், பி. யூலை 25, 1939) ஒரு தமிழக அரசியல்வாதியும், கல்விப்பயிற்சியால் மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் ஆவார்.[1] இந்தக் கட்சியை 1990-களில் தொடங்கினார். இதற்கு முன்னர், வன்னியர் சங்கத்தில் அங்கம் வகித்தார். இவரது ஆதரவாளர்களால் "அய்யா" என்ற பெயரிலே அழைக்கப்படுகின்றார்.
ச. இராமதாசு | |
---|---|
பிறப்பு | சூலை 25, 1939 (அகவை 79) கீழ்சிவரி, விழுப்புரம், தமிழ்நாடு |
இருப்பிடம் | தைலாபுரம் , திண்டிவனம் |
கல்வி | மருத்துவம் |
பணி | அரசியல்வாதி, மருத்துவர் |
அறியப்படுவது | நிறுவனர் பாட்டாளி மக்கள் கட்சி |
அரசியல் கட்சி | ![]() ![]() |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | சரசுவதி அம்மாள் |
பிள்ளைகள் | ஸ்ரீகாந்தி,கவிதா,அன்புமணி ராமதாஸ் |
வரலாறு
இவர் 1939 ஆம் ஆண்டு சூலை மாதம் 25 ஆம் தேதி, தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்சிவரி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சஞ்சீவராயன், தாயார் நவநீதம்மாள் ஆவார். இவரது உடன் பிறந்தோர் நான்கு பேர். ஒருவர் சகோதரி மற்றும் மூவர் சகோதரர் ஆவர்.
கல்வியும் தொழிலும்
மருத்துவக் கல்வி கற்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற இராமதாசு, 1967 ஆம் ஆண்டில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியத் தொடங்கினார்.
1980இல் தான் சார்ந்த வன்னியர் சமூகத்தின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். 1990இல் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என்னும் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தது.
திருமணமும், குடும்பமும்
இவர் சரசுவதி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஸ்ரீகாந்தி, மற்றும் கவிதா என இரண்டு மகளும், அன்புமணி என்னும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகனான அன்புமணியும் ஓர் அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். அன்புமணி 2004 இல் இந்திய மாநிலங்களவைக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.கடந்த 16 வது நாடாளுமன்றத்தில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் (2014-2019), தற்போதைய நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
பணிகளும் பிறசேவைகளும்
- இவர் மது விலக்கிற்காகவும் தமிழக மக்களின் மீது திணிக்கப்படும் மது மற்றும் அதன் கேடுகளில் இருந்து விடுவிக்கவும் கடந்த 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறார்.
- தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தனியாக கல்வி வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.
- தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். இதற்காக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்.
- தமிழை வளர்ப்பதற்காக பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையை நிறுவியவர்.
- பசுமைத் தாயகம் என்னும் சமூகநலச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார்.
சான்றுகள்
- "From a sectarian leader, Ramadoss has come a long way". Rediff.com. பார்த்த நாள் 2009-08-18.