குடியரசுத் தலைவர் ஆட்சி
குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு ஒன்றிய அரசின் மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்வகை ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது. இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது மாநில அரசுகளைக் கலைக்க ஒன்றிய அரசிற்கு அதிகாரம் உள்ளது.மாநில சட்டப்பேரவையில் எந்தவொருக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாது ஆட்சி அமைக்க இயலாதிருப்பினும் குடியரசுத் தலைவராட்சி அமையலாம்.
ஓர் மாநில ஆளுநர், சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத நேரத்தில் தாமே முடிவெடுத்தும்,அல்லது ஆளும் கட்சியின் பரிந்துரைப்படியோ அல்லது ஒன்றிய அரசின் பரிந்துரைப்படுயோ சட்டப்பேரவையை கலைக்கலாம்.அப்போது சட்டஅவை ஆறு மாதங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பெரும்பான்மை நிலைநிறுத்தப்பட இயலவில்லை எனில் தேர்தல்கள் நடத்தப்படும்.
மாநில ஆட்சி வழமையாக ஓர் முதலமைச்சரின் கீழ் இயங்காது குடியரசுத் தலைவரின் கீழ் இயங்குவதால் இதனை குடியரசுத்தலைவராட்சி என்று குறிப்பிடுகின்றனர்.ஆயினும் நிர்வாக அதிகாரங்கள் மாநில ஆளுநருக்கு மாற்றப்பட்டு ஆட்சி நடத்துகிறார். அவர் தமது உதவிக்கு ஆலோசகர்களை,ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், நியமித்துக் கொளவார்.பொதுவாக ஒன்றிய அரசின் கொள்கைகள் பின்பற்றப்படும்.
விதி 356
விதி 356 ஓர் மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் சரியாக இயங்கவியலா நிலை இருக்கும்போது ஒன்றிய அரசு மாநில அரசை நீக்கி குடியரசுத் தலைவராட்சியை அமைத்திட அதிகாரம் வழங்குகிறது.
இந்த விதி ஒன்றிய அரசு ஓர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்போது (காட்டாக கலவரங்கள்) அதனைக் கட்டுப்படுத்த இயலாத மாநில அரசினை கட்டுக்குள் கொண்டுவர வகை செய்கிறது.ஆயினும் பெரும்பாலான நேரங்களில் இது எதிர்கட்சி அரசுகளை நீக்கவே பயன்படுத்தப்படுவதாக அரசியல் விமரிசகர்கள் கருதுகிறார்கள். ஆகவே இது மாநில கூட்டாட்சிக்கு பொருத்தமற்ற விதி என்று வாதிடுகின்றனர். 1950ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபிறகு 100க்கும் கூடுதலாக இவ்விதியை ஒன்றிய அரசு பயன்படுத்தி உள்ளது.
இந்த விதி முதன்முதலாக சூலை 31,1959 அன்று கேரள மக்களால் தேர்ந்தெடுகப்பட்ட இந்திய பொதுவுடமைக் கட்சி அரசைக் கலைக்கப் பயன்படுத்தப்பட்டது.
விதி 355
விதி 355 ஓர் மாநிலத்தை வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் உள்நாட்டு கலவரங்களின்போதும் காப்பதை ஒன்றிய அரசிற்கு கட்டாயமாக்கியுள்ளது. அப்போது மாநில அரசிற்கு வழிகாட்டிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விதி பா. ஜ. க ஆட்சி செய்த மாநிலங்களில் கிறித்துவ தேவாலயங்கள் தாக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்டது. இந்த விதியை மாற்றம் செய்து மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய அரசே மேற்கொள்ளும் வகை செய்ய வேண்டும் என்றும் கோரப்படுகிறது[1].
மேலும் பார்க்க
- இந்திய அரசியலமைப்பு பகுதி XVIII
- இந்திய அரசியலமைப்பு விதி 370
- சர்க்காரியா கமிசன்