இ. முருகையன்
இ. முருகையன் (ஏப்ரல் 23, 1935 - ஜூன் 27, 2009[1], கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவர்.
இ. முருகையன் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஏப்ரல் 23, 1935 சாவகச்சேரி, யாழ்ப்பாணம் |
இறப்பு | சூன் 27, 2009 74) கொழும்பு, இலங்கை | (அகவை
கல்வி | MA (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1985) BA (இலண்டன், 1961) |
பணியகம் | அரசுப்பணி |
அறியப்படுவது | கவிஞர், நாடகாசிரியர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் |
பெற்றோர் | இராமுப்பிள்ளை செல்லம்மா |
வாழ்க்கைத் துணை | தவமணிதேவி |
1950 முதல் கவிதை எழுதும் முருகையன் ஏராளமான கவிதைகள், சில காவியங்கள், மேடைப் பாநாடகங்கள், வானொலிப் பாநாடகங்களை எழுதியுள்ளார். திறனாய்வுக் கட்டுரைகள், கவிதை மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் ஈடுபட்டுள்ளார்.
1964 - 1965 காலப்பகுதியில் வெளிவந்த நோக்கு என்ற காலாண்டுக் கவிதை இதழின் இணையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்
யாழ்ப்பாண மாவட்டம், தென்மராட்சியில் கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் மூத்த புதல்வனாகப் பிறந்தவர் முருகையன். இவருடன் கூடப் பிறந்தவர் நாடக வல்லுனரும், கவிஞருமான சிவானந்தன். முருகையன் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். வித்துவான் க. கார்த்திகேசுவிடம் தமிழ் கற்ற முருகையன் உயர்கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கொழும்பு வளாகத்தில் பயின்று 1956 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பட்டதாரியானார். பின்னர் 1961 ஆம் ஆண்டில் இலண்டனில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.
அரசுப் பணி
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் 1956 இல் விஞ்ஞான ஆசிரியப் பணியைத் தொடங்கிய முருகையன், அரச மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், பாடநூல் வெளியீட்டுத் திணைக்களத்தில் முதன்மைப் பணிப்பாளராகவும், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களில் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். இறுதியாக, 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் முதுதுணை பதிவாளராகப் பணியாற்றி 1995 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
கலைச்சொல்லாக்கம்
இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தில் பணியாற்றிய முருகையன் தமிழ் கலைச்சொல்லாக்கத்துக்கு கணிசமானளவு பங்களிப்பினைச் செலுத்தியுள்ளார்.
தேசிய கலை இலக்கியப் பேரவை
தேசிய கலை இலக்கியப்பேரவையின் தலைவராயிருந்த இ. முருகையன் அப்பேரவையின் தொடக்க காலத்திலிருந்தே பங்கெடுத்து வந்ததுடன் தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகம் இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார்.
விருதுகள்
- இலங்கை அரசினால் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதிஉயர் விருதான சாகித்திய இரத்தினம் விருது 2007 ஆம் ஆண்டில் முருகையனுக்கு வழங்கப்பட்டது.
நூல்களுக்கான பதிப்புரிமை
முருகையன் தனது நூல்களுக்குப் பதிப்புரிமை கோருவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பதிப்பகத்தாரிடம் தனது எழுத்துக்களை மக்களில் எவரும் எப்படியும் பயன்படுத்தலாம் என்று சொல்லிவரும் வழக்கமுடையவர்.
எழுதிய நூல்கள்
கவிதை நூல்கள்
- ஒருவரம் (கவிதைகள், 1964)
- நெடும்பகல் (காவியம், 1967)
- அது-அவர்கள் நீண்ட கவிதை (1986)
- மாடும் கயிறு அறுக்கும் (1990)
- நாங்கள் மனிதர் (1992)
- ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும் (2001)
- ஆதிபகவன் (1978)
பா நாடக நூல்கள்
- வந்து சேர்ந்தன, தரிசனம் (1965)
- கோபுரவாசல் (1969)
- வெறியாட்டு (1989)
- மேற்பூச்சு (1995)
- சங்கடங்கள் (2000)
- உண்மை (மொழிபெயர்ப்பு, 2002)
எழுதிய மேடை நாடகங்கள்
- கடூழியம்
- அப்பரும் சுப்பரும் (1971)
திறனாய்வு நூல்கள்
- ஒருசில விதி செய்வோம்
- இன்றைய உலகில் இலக்கியம்
- கவிதை நயம் (பேரா. க. கைலாசபதியுடன் இணைந்து)
கட்டுரை நூல்கள்
- இளநலம்
- மொழிபெயர்ப்பு நுட்பம்
வேறு
- திருவெம்பாவையர் (உரைநடைச் சித்திரம்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- ஈழத் தமிழ் அரங்கில் மக்கத்தான அற்புதங்களை எதிர்வுகூற முடியவில்லை, இ. முருகையனின் நேர்காணல், கண்டவர் தே. தேவானந்த்
- நூலகத்தில் முருகையனின் நூல்கள்
- தமிழ்ப் புலத்தில் பொலிந்த செஞ்சாலி - கவிஞர் இ. முருகையன் - மறவன்புலவு க. சச்சிதானந்தன்
- கவிஞர் இ.முருகையன் நினைவில்...!, கானா பிரபா, ஜூன் 28, 2009
- ஈழத்துக் கவிதை நதி – 1
- கவிஞர் முருகையன் & நடிகமணி வி.வி.வைரமுத்து நினைவுப் பகிர்வுகள்
- செய் நேர்த்தியை முதன்மைப்படுத்திய ஓர் உன்னதமான படைப்பாளி முருகையன், பேராசிரியர் சி. சிவசேகரம்