ஆதித்தர்கள்
ஆதித்தர்கள் என்பது வேதகாலத்தில் சிறப்பாக வணங்கப்பட்ட ஒரு கடவுளர் (தேவர்) குழுவைக் குறிக்கின்றது. இந்த அண்டத்தையும், மனித சமுதாயத்தையும் கட்டுப்படுத்துகின்ற விதிகளுக்குக் கொடுக்கப்பட்ட உருவகங்களே ஆதித்தர்கள் என இந்துத் தத்துவவியலாளர்கள் கூறுகின்றனர். காசிபர் - அதிதி இணையர்களின் புதல்வர்கள் ஆதித்யர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ஆதித்தர்களின் எண்ணிக்கை என்றும் ஒரேயளவாகவே இருந்ததாகத் தெரியவில்லை. வேதங்களில் இவர்களை பற்றிய குறிப்புகள் குறைவாகவே உள்ளன. இந்துக்களின் மிகப் பழைய வேதமான ரிக் வேதம் ஆறு ஆதித்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. பிராமணங்கள் எட்டு வரையான ஆதித்தர்களைப் பற்றிக் கூறுகின்றன. இதற்குப் பின்வந்த நூல்களில் கூடிய அளவாகப் பன்னிரண்டு தேவர்கள் ஆதித்தர் குழுவில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இறுதியாக சதவாத பிராமனதின்படி மொத்தம் 33,000,000 ஆதித்யர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்யர்கள் உள்ளனர். அவர்கள், அம்சன், ஆர்யமான், பாகன், துத்தி, மித்திரன், புஷன், சக்ரன், சாவித்திரன், துவச்த்திரன், வருணன், விஷ்ணு, விவஸ்வத் ஆகியோராகும். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்று கூறப்பட்டுள்ளது.