அன்னா லாறினா

அன்னா மிகயிலோவ்னா லாறினா (Anna Mikhailovna Larina, உருசியம்: Анна Михайловна Ларина, 27 சனவரி 1914 – 24 பிப்ரவரி 1996) போல்செவிக் புரட்சியாளரும் உருசிய அரசியல்வாதியுமான நிக்கொலாய் புகாரினின் இரண்டாவது மனைவி ஆவார். 1938ல் யோசப் ஸ்டாலின் ஆட்சியில் கணவர் புகாரினுக்கு மரண தண்டனை அறிவித்து கொல்லப்பட்டபோது, அந்தத் தீர்ப்பைத் திரும்பிப் பெற பல ஆண்டுகள் போராடியவர். Незабываемое (இதை நான் மறக்கமுடியாது, This I Cannot Forget) என்ற பிரபலமான நூலின் ஆசிரியர்.

அன்னா மிகயிலோவ்னா லாறினா
பிறப்பு27 ஜனவரி 1914
இறப்பு24 பிப்ரவரி 1996 (வயது 82)
கல்லறைதுரோயெகுரோவ்ஸ்கயே கல்லறைத் தோட்டம், மாஸ்கோ
தேசியம்உருசியர்
வாழ்க்கைத்
துணை
நிக்கொலாய் புகாரின்

வாழ்க்கை

1914ம் ஆண்டு அன்னா லாறினா பிறந்தார். உருசியப் பொருளியலாளரும் அரசியல்வாதியுமான யூரி லாரினால் தத்தெடுக்கப்பட்டார். அப்போது பரவலாக சோவியத் ஒன்றியத்தில் இருந்த பல புரட்சியாளர்களை நெருங்கி அறியும் வாய்ப்பு கிடைத்தது.[1] மிக இளம் வயதிலேயே அவரை விட மிக மூத்தவரான 26 வயதான புகாரினின் அறிமுகம் கிடைத்தது. அப்போதே இளம் பெண்களுக்குரிய வகையில் தொடர்ந்து காதல் குறிப்புகள் பல எழுதினார். 1934ல் புகாரினுடன் அவருக்கு திருமணம் நடந்தது. 1936ல் அவர்களுக்கு யூரி எனும் மகன் பிறந்தான்.[2]

1937ல் அன்னா கைது செய்து செய்யப்பட்டார். அப்போது ஒரு வயதே ஆகியிருந்த தன் மகனிடம் இருந்து அடுத்து இருபது ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்.[3] 1937ல் புகாரின் மீது நிறைய குற்றங்கள் சுமத்தப்பட்டன. உளவு பார்த்ததாக, சோவியத் ஒன்றியத்தைக் கலைக்க முயற்சி செய்ததாக, குலாக்குகளின் (உயர்குடி உழவர்) எழுச்சியை ஒருங்கிணைத்ததாக, யோசப் ஸ்டாலினை கொலைசெய்ய முயற்சித்ததாக, கடந்த காலத்தில் லெனினுக்கு எதிராக பல்வேறு மர்மமான செயல்களை செய்ததாக என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. புகாரினால் அவரது பதவியையும் தகுதியையும் மீறி எப்படி தன்மீது பழி விழுந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் மனதளவில் அவர் தனக்கு வரப்போகும் மரணத்திற்கு தயாராகியிருந்தார்.[4]

அவர்கள் இருவரும் பிரிவதற்கு முன் புகாரின் அன்னாவிடம் தனது இறுதி வாக்குமூலத்தை மனனம் செய்துகொள்ளுமாறு கூறினார். அது ஸ்டாலினால் தடுக்கப்படும் என்றும் அவருக்கு தெரிந்திருந்தது. அந்த வாக்குமூலத்தில் எதிர்கால கம்யூனிசத் தலைவர்களிடம் தன்னை தன் பழியிலிருந்து மீட்குமாறு கேட்டுக்கொண்டார். அதை எழுதிவைக்கப் பயந்து, சிறையில் தூங்கும்போது தனக்குள்ளேயே “ஒரு பிரார்த்தனை போல” புகாரினின் சொற்களை சொல்லிக்கொண்டதாக அன்னா கூறியுள்ளார். 1988வரை அந்த வாக்குமூலம் முழுதாகப் பதிப்பிக்கப்படவில்லை.

அன்னாவின் இருபதாண்டு கால வாழ்க்கை சிறையிலும் நாடுகடத்தப்பட்டும் வதை முகாம்களிலும் கழிந்தது. இதே காலத்தில்தான் தனது இரண்டாவது கணவரான பியோதர் பதயேவை சந்தித்தார். அன்னாவால் அவரது இரண்டாம் கணவர் பலமுறை கைது செய்யப்பட்டு 1959ல் இறந்தார். அன்னாவுக்கு பியோதரிடம் இரண்டு குழந்தைகள். மிகயீல், நாதியா.[3]

ஸ்டாலின் இறந்தபிறகு 1953ல் குலாக்குகளின் அமைப்பிலிருந்து[5] லாறினாவுக்கு விடுதலை கிடைத்தது. இருபது ஆண்டுகளை சிறையில் செலவழித்ததில் அவருக்கு காசநோயும் வந்திருந்தது. 1959ல் தேசவிலக்கம் முடிந்து மாஸ்கோவிற்கு திரும்பினார். பின்னர் தனது கணவரின் பழியை நீக்குவதில் எஞ்சிய வாழ்நாட்களை கழித்தார். புரட்சியாளர்களின் வரிசையில் புகாரின் கொண்டுவரப் படவேண்டும் என்று நிகிதா குருசேவிற்கும், அவரைத் தொடர்ந்தவர்களுக்கும் நீண்ட விளக்கமான கடிதங்கள் எழுதினார். 1988ல் புகாரின் மீது இருந்த அனைத்து பழிகளும் நீக்கப்பட்டு, புரட்சியாளர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இறந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு. புகாரினின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி கம்யூனிஸ்ட் கட்சியின் மார்சிய-லெனினிய மையம் ஒருங்கிணைத்த மாநாட்டில் அன்னா பேசினார்.

82வயதில் 1996 பெப்ரவரி 24 இல் அன்னா மாஸ்கோவில் காலமானார். துரோயேகுரோவ்ஸ்கோயே கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டார்.

தமிழில்

தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எனும் புதினத்தில் புகாரின், அன்னா லாறினா இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். அதில் அன்னா பரவலாக உருசிய முறைப்படி புகாரினினா என்றும் அழைக்கப்படுகிறார். 750 பக்கங்கள் கொண்ட அந்த நாவலே அன்னா மிகயிலோவ்னா லாறினாவுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.[6]

உசாத்துணைகள்

  1. "OBITUARY : Anna Larina". Independent Group (1 March 1996). பார்த்த நாள் 18 பிப்ரவரி 2017.
  2. "Artist Yuri Larin, (1936 - 2014)". THE INTERNET JOURNAL OF THE INTERNATIONAL ARTISTS PROMOTION GROUP (2012). பார்த்த நாள் 18 பிப்ரவரி 2017.
  3. COATES, STEVE (4-10-2010). "A Gulag Family Reunion". The New York Times. http://artsbeat.blogs.nytimes.com/2010/10/04/a-gulag-family-reunion/?_r=0.
  4. Stanley, Alessandra (26 பிப்ரவரி 1996). "Anna Larina, 82, the Widow Of Bukharin, Dies in Moscow". The New York Times. https://www.nytimes.com/1996/02/26/world/anna-larina-82-the-widow-of-bukharin-dies-in-moscow.html.
  5. RUSSIA: MOSCOW: FUNERAL OF WIFE OF COMMUNIST BUKHARIN. Associated Press archive
  6. நிழலின் குரல் கடிதங்கள், விமர்சனங்கள்

துணைநூல்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.