அ. ந. கந்தசாமி
அ. ந. கந்தசாமி (ஆகத்து 8, 1924 - பெப்ரவரி 14, 1968) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகின்றவர்.[1] சிறுகதை, புதின ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.[1] கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே என்னும் புனைபெயர்களிலும் எழுதியவர்.
அ. ந. கந்தசாமி | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆகத்து 8, 1924 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் |
இறப்பு | பெப்ரவரி 14, 1968 43) | (அகவை
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | நடராஜா, கௌரியம்மா |
வாழ்க்கைக் குறிப்பு
அ. ந. கந்தசாமியின் தந்தை நடராஜா யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் வாழ்ந்திருந்தவர். சிறைச்சாலையில் மருத்துவ அதிகாரியாக விளங்கியவர். தாய் கெளரியம்மா. இவருடன் உடன்பிறந்தவர்கள் நவரத்தினம், தையல்நாயகி ஆகியோர். தந்தை பல சொத்துக்களின் உரிமையாளராக விளங்கியவர். கந்தசாமிக்கு ஐந்து வயதான போது தந்தை இறந்து விட்டார். தாயும் தந்தை இறந்து 41-ஆம் நாள் இறந்து விட்டார்.[2] தொடக்கக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்ற கந்தசாமி சிறிதுகாலம் அளவெட்டி சென்று பாட்டியுடன் வாழ்ந்து வந்தார்.[1] அங்கு தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.[2] பின்னர் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் ஆண்டு 10 (SSC) வரை கல்வி கற்றார்.[1]
அ. ந. கந்தசாமி சிறிதுகாலம் கொழும்பு கறுவாக்காட்டுப் பகுதியில் வாழ்ந்து மணமுடித்தார். இவரது குடும்பவாழ்க்கை நீடிக்கவில்லை. திருமணத்தில் ஏற்பட்ட ஆள்மாறாட்டமே இதற்குக் காரணம். பார்த்த பெண் ஒருத்தி. மணந்ததோ அவரது உடன் பிறந்தவளை.
இலக்கியப் பணி
அளவெட்டியில் வாழ்ந்ததால் தன் பெயரில் முன்னொட்டாக 'அ' என்பதையும், தந்தையின் பெயரின் முதலெழுத்தான 'ந' என்பதையும் இணைத்து அ. ந. கந்தசாமி என்று தன்னை அ. ந. கந்தசாமி அழைத்துக் கொண்டார். இவர் பதினான்கு வயது முதலே எழுதத் தொடங்கி விட்டார். ஈழகேசரி சிறுவர் பகுதியில் எழுதத் தொடங்கினார். அச்சமயம் ஈழகேசரி நடத்திய பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். கதைப்போட்டியில் முதற்பரிசும் பெற்றார். மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்துக்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துக்கு முக்கியமானவர்களில் ஒருவர். அதன் சங்கப் பண்ணை இயற்றினார்.
சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர் அ. ந. க. ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர். 1943 இலிருந்து 1953 வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். அச்சமயம் பல ஆங்கில நூல்களைப் பணி நிமித்தம் மொழிபெயர்த்துள்ளார். (அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் அ. ந. க இலங்கை அரச தகவற் துறையில் 12, 13 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிடுவார். தகவற்துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீலங்கா' இதழாசிரியராகவும் விளங்கினார். அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனங்களுக்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்து வந்தார். ஒப்சேவரில் உரை திருத்துபவராகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார். வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார்.
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய கந்தசாமி தேசாபிமானி இதழின் தொடக்கக்கால ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அக்காலகட்டத்தில் சுதந்திரன் இதழில் சேர்ந்து அதன் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். ஆங்கில இதழான டிரிபியூனில் சிலகாலம் பணியாற்றினார். அச்சமயம் திருக்குறள் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். எமிலி சோலாவின் 'நாநா' (புதினம்), பெர்ட்ராண்ட் ரசலின் 'யூத அராபிய உறவுகள்', 'பொம்மை மாநகர்' என்னும் சீனப் புதினம், ஓ ஹென்றியின் சிறுகதைகள் மற்றும் பல படைப்புகளை மொழிபெயர்த்தார்.
பேராசிரியர் க. கைலாசபதி தனது 'ஓப்பியல் இலக்கியம்' என்னும் நூலினை அறிஞர் அ. ந. கந்தசாமிக்கு உரித்தாக்கி உள்ளார்.
மரபுக் கவிதைகள் எழுதுவதில் மிகுந்த புலமை மிக்கவர் கந்தசாமி.
ஆக்கங்கள்
வெளிவந்த நூல்கள்
- வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் கட்டுரைகள்)
- மதமாற்றம் (நாடகம்)
வேறு
- களனி வெள்ளம் (புதினம்)
- மனக்கண் (புதினத் தொடர்)
- நாநா (மொழிபெயர்ப்பு, பிரெஞ்சு எழுத்தாளரான எமிலி சோலாவின் புதினம், சுதந்திரனில் அக்டோபர் 21, 1951 முதல் ஆகத்து 28, 1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன).
மேற்கோள்கள்
- ஜீவா, அந்தனி (12 பெப்ரவரி 1984). "சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்". தினகரன் வாரமஞ்சரி. பார்த்த நாள் 3 மார்ச் 2019.
- கிரிதரன், வ. ந. (ஏப்ரல் 2009). "அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!". பதிவுகள் (112). http://www.geotamil.com/pathivukal/VNG_ON_ANK_ILAKKIYAPUUKKAl.htm.