நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு, இந்தியா
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு, இந்தியா (Coal Mining Scam, Coalgate) என்பது தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அலுவலகம் நாட்டின் நிலக்கரி வளங்களை பொது ஏலமுறையில் உயர்ந்த ஏலதாரருக்கு வழங்காது, முறையற்ற மற்றும் விதிகளின்றி 142 நிலக்கரி நிலத்தொகுதிகளை [1]தனியார் மற்றும் பங்கு சந்தையிலுள்ள பொது நிறுவனங்களுக்கு சுரங்கம் அமைக்க இந்திய அரசு உரிமம் வழங்கியதால் அரசுக்குக் கிடைக்கக்கூடிய நிதியம் குறியீட்டளவில் நட்டம் அடைந்ததாகக் குற்றம் சாட்டியதாகும். தலைமை கணக்காயர் அலுவலக மதிப்பீட்டின்படி இந்த குறியீட்டு நட்டம் 2004-2009 ஆண்டுகளுக்கு ஏறத்தாழ 186000 கோடியாகும் .[2][3][4] இதனை இந்திய எதிர்கட்சிகளும் ஊடகங்களும் மிகப் பெரும் ஊழலாக விவரிக்கின்றன.[5][6] இதனைக் குறித்த நாடாளுமன்ற உரையாடல் ஆகத்து 26, 2012 அன்று நடைபெறுவதாகப் பட்டியலிடப்பட்டு இந்தியப் பிரதமர் அறிக்கை படிக்கத் தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் தடைபட்டது. [7]2006 முதல் 2009 வரை சுரங்க அமைச்சராக மன்மோகன் சிங் பதவி வகித்த போது 57 நிலக்கரியுள்ள நிலத்தொகுதிகள் பல்வேறு நிறுவனங்களுக்கு ஏலமில்லாமல் கொடுக்கப்பட்டதால் [8] இம்முறைகேட்டுக்கு பொறுப்பேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக்கவேண்டும் என வலியுறுத்தி முதன்மை எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாது சட்டமாக்கலை முடக்கி வருகிறது. இதனைப் பிற எதிர்கட்சிகள் குறை கூறி வருகின்றன.[9] மேலும் பாரதிய ஜனதா கட்சி 2004க்கு பிறகு ஒதுக்கீடு செய்த அனைத்து (142) நிலக்கரியுள்ள நிலத்தொகுதிகளையும் நீக்க கோருகிறது. [10]
உச்சநீதிமன்ற விசாரணை
1993ம் ஆண்டிலிருந்தே பாஜக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட நிலக்கரிப் படுகைகள் உட்பட அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜி.இ.வாஹன்வதி கூறியதாவது[11]:-
நாங்கள் (ஒன்றிய அரசு) எப்போதும் உரிய வழியில்தான் நிலக்கரிப்படுகைகளை ஒதுக்கீடு செய்தோம். ஆனால் கடந்த 1991-92ல் மின் உற்பத்தி நிலை சற்று மாற்றமடைந்திருந்தது. இந்நேரத்தில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு தேவைகள் அதிகம் இருந்தது. இதனால் ஒதுக்கீட்டு விதிகளை அரசு மாற்றியிருக்கலாம். இந்த ஒதுக்கீட்டில் இன்னும்சரியாக நடந்திருக்க முடியும். தேசிய நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன. சில நேரங்களில் தவறாகவும் போயிருக்கலாம். நிகழ்வுகளில் தவறு நடந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்
—ஜி.இ.வாஹன்வதி
தீர்ப்பு
இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு 1993- 2004, 2006- 2013 காலகட்டத்தில் செய்யப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து செய்யவததாக தெரிவித்தது .ரத்து செய்யப்பட்ட நிலக்கரிப் படுகைகளை வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்கலாம் எனவும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.இது வெறும் பரிந்துரையே என்றும், இதைவிட சிறந்த திட்டம் இந்திய அரசிடம் இருக்குமேயானால் அதனை உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.[12]அதன் பின் செப்டம்பர் 2014இல் தீர்ப்பளித்த போது 218 சுரங்கங்களில், 214 சுரங்கங்களின் உரிமங்களை மட்டும் ரத்து செய்ய உத்தரவிட்டது.அல்ட்ரா மெகா பவர் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 4 படுகைகள் மட்டும் ரத்து செய்யப்படவில்லை.உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள் 6 மாதங்களுக்குள் படிப்படியாக தங்களது செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.மேலும், நிலக்கரியை வெட்டிஎடுக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து கணக்கிட்டு ஒரு டன் நிலக்கரிக்கு ரூ.295 அபராதமாக செலுத்த வேண்டும் என்றும்உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.[13]
மேற்கோள்கள்
- 142 நிலக்கரி நிலத்தொகுதிகள்
- 'Coalgate': Government releases bits of CAG letter to deny TOI report Economic times. 23 MAR, 2012
- Coalgate report rocks Parliament Deccan Herald. Mar 22, 2012
- 'Coalgate': Govt releases bits of CAG letter to deny TOI report Times of India Mar 23, 2012
- "Potential coal mining scam in Madhya Pradesh, Chhattisgarh?". IBN Live. 22 March 2012. http://ibnlive.in.com/news/potential-coal-mining-scam-in-mp-chhattisgarh/241626-3.html. பார்த்த நாள்: 22 March 2012.
- "Coal scam shakes parliament; opposition says PM held portfolio, must explain". NDTV. 22 March 2012. http://www.ndtv.com/article/india/row-over-cags-coal-mining-report-188735. பார்த்த நாள்: 22 March 2012.
- http://economictimes.indiatimes.com/news/politics/nation/coal-scam-full-text-of-pm-manmohan-singhs-statement-in-parliament/articleshow/15816145.cms
- 2006-2009 ல் மன் மோகன் சிங் நிலக்கரி துறை அமைச்சர்
- "7-வது நாளாக முடங்கிப் போன பார்லி- சுமூகமாக நடத்த வலியுறுத்தி சமாஜ்வாதி,இடதுசாரிகள் நாளை ஆர்ப்பாட்டம்". ஒன்இந்தியா (ஆகஸ்ட் 30, 2012). பார்த்த நாள் செப்டம்பர் 04, 2012.
- முறைகேடான ஒதுக்கீட்டை நீக்க கோருகிறது பாஜக
- "நிலக்கரி ஊழல் உண்மைதான்". தீக்கதிர்: pp. 1. 10 சனவரி 2014. http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 12 சனவரி 2014.
- "நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்ட விரோதம் :: ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (26 ஆகத்து 2014). பார்த்த நாள் 26 ஆகத்து 2014.
- "214 சட்ட விரோத நிலக்கரிசுரங்கங்களின் ஒதுக்கீடு ரத்து :: உச்சநீதிமன்றம் அதிரடி" 3. தீக்கதிர் தமிழ் நாளிதழ் (25 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 25 செப்டம்பர் 2014.