ஜானி (1980 திரைப்படம்)

ஜானி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் இயக்கத்தில் [1][2][3] வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஜானி
இயக்கம்மகேந்திரன்
தயாரிப்புவி. கோபிநாத்
கே. ஆர். ஜி. ஆர்ட் பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீதேவி
வெளியீடுஆகத்து 15, 1980
நீளம்3986 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

இந்தப் படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். ஒன்று ஜானி என்ற திருடன் வேடம், அடுத்து வித்யாசாகர் என்னும் நாவிதன் வேடம் ஆகும். ஜானி ஒரு நூதனத் திருடன். தடயங்கள் இல்லாமல் திருடுவதில் வல்லவன். பிரபல பாடகி அர்ச்சனாவின் (ஸ்ரீதேவி) இரசிகனாகவும் இருக்கிறான். எதிர்பாராமல் இருவரும் சந்தித்து பழகுகின்றனர். ஜானியின் அன்பால் ஈர்க்கப்படும் அர்ச்சனா அவனை விரும்புகிறாள். அதை அவனிடம் கூறி திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்கிறாள். இதை எதிர்பார்க்காத ஜானி தன் மறுபக்கத்தைக் கூற முடியாமல், அவள் காதலை ஏற்கும் தகுதி தனக்கு இல்லை எனக் கூறி வெளியேறுகிறான். இதனால் மனம் வெதும்பிய அர்ச்சனா பாடுவதை நிறுத்திவிடுகிறாள்.

ஜானியைப் போன்ற தோற்றம் கொண்ட வித்யாசாகர் தன் வேலைக்காரியான பாமாவை விரும்பி அவளை வீட்டுக்காரியாக்க முடிவெடுக்கிறான். இந்நிலையில் பாமா வித்தியாசாகரை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பணக்காரனுடன் ஓட திட்டமிடுகிறாள். இதை கண்டுபிடிக்கும் வித்தியாசாகர் அவளை கொன்றுவிடுகிறான். இந்தக் கொலைப் பழி ஜானிமீது விழுகிறது. இதற்கிடையில் ஜானியால் பாதிக்கப்பட்வர்கள் வித்தியாசாகரை ஜானி என நினைத்து அவனுக்கு தொல்லை தருகின்றனர். காயமுற்ற வித்தியாசாகர் போலீசிடம் இருந்து தப்பி அர்ச்சனா வீட்டுக்கு வந்து ஜானிபோல நடிக்கிறான். அர்ச்சனாவின் உண்மை அன்பை உணர்ந்த வித்தியாசாகர் தான் ஜானி அல்ல என்ற உண்மையைக் கூறுகின்றான். மேலும் ஜானியை மீண்டும் வரவழைக்க அர்ச்சனா பாடும் கடைசி நிகழ்ச்சி என விளம்பரப்படுத்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் ஜானி நிச்சயம் வருவான் என ஆலோசனை கூறுகிறான். அதனை ஏற்ற அர்ச்சனா அவ்வறே செய்ய திட்டமிடுகிறாள். பாடல் நிகழ்ச்சியின்போது மோசமான வானிலையால் கடும் மழை பொழிவதால் அவள் பாடலை கேட்க யாரும் வராத நிலை ஏற்படுகிறது. இருந்தும் ஜானி வருவான் என்ற நம்பிக்கையில் அர்ச்சனா பாடலைப் பாடுகிறாள். வித்யாசாகர் கூறியதைப்போலவே பாடலைக் கேட்க மேடை அருகே ஜானி தோற்றத்தில் வித்தியாசாகர் வருகிறான். அவனை பிடிக்க காவலர்கள் விரட்டி வருகின்றனர். காவலர்களிடம் தான்தான் பாமாவைக் கொன்றதாகவும், பலரை ஏமாற்றியதாகவும், ஆனால் தன்னைப் போன்ற தோற்றமுடைய ஜானியை இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்கிறான். பின்னர் அர்ச்சனாவிடம் வந்து ஜானி செய்த தவறுகளை தானே ஏற்றுக் கொள்வதாகவும் இருவரும் நிம்மதியாக வழுங்கள் என கூறுகிறான். ஜானி நிச்சயம் வருவன் எனவும் கூறுகிறான். அவ்வாறே ஜானியும் அங்கு வந்து சேர்கிறான்.

ஆதாரங்கள்

  1. திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010
  2. மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014
  3. மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.