எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா

சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (ஆங்கிலம்:Solomon West Ridgeway Dias Bandaranaike, சிங்களம்: සොලමන් වෙස්ට් රිජ්වේ ඩයස් බණ්ඩාරනායක, சுருக்கமாக, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, S. W. R. D. Bandaranaike, ஜனவரி 8, 1899 - செப்டெம்பர் 26, 1959) இலங்கையின் நான்காவது பிரதமர் ஆவர். இவர் பிரதமராக பதவி வகித்த போது பௌத்த பிக்கு ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
இலங்கைப் பிரதமர்
பதவியில்
1956–1959
அரசர் எலிசபெத் II
முன்னவர் ஜோன் கொத்தலாவலை
பின்வந்தவர் டபிள்யூ. தகநாயக்கா
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 8, 1899
கம்பகா,இலங்கை
இறப்பு செப்டம்பர் 26, 1959(1959-09-26) (அகவை 60)
கொழும்பு, இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சிறிமாவோ பண்டாரநாயக்கா
தொழில் அரசியல்வாதி
சமயம் பௌத்தம்
இணையம் swrdbandaranaike.lk

குடும்பம்

பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். இவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர்.சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோ திருமணம் செய்து கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் சிறிமாவோ கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார்.[1] இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான சந்திரிகா குமாரத்துங்க, அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.

அரசியல் வாழ்க்கை

பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951 வரை இணைந்த இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.

1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.

கொலை

தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஞானசார பௌத்த பிக்குவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.

விட்டுச் சென்றவை

1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளைக் கையாண்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது எனபது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தையும் பௌத்த பிக்குகளினதும் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவினதும் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார்.[2] இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவராகவே கருதப்படுகிறார்.[3]

மேற்கோள்கள்

  1. "Sirimavo Bandaranaike: First woman premier". BBC News.
  2. "Bandaranaike - Chelvanayagam Agreement 1957". Tamil Nation.
  3. "ஜே. ஆர். பாதயாத்திரை". Sangam.org.


இலங்கையின் பிரதமர்கள்
டி. எஸ். சேனநாயக்கா டட்லி சேனநாயக்கா ஜோன் கொத்தலாவலை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா டபிள்யூ தகநாயக்கா சிறிமாவோ பண்டாரநாயக்கா ஜே. ஆர். ஜெயவர்த்தானா ரணசிங்க பிரேமதாசா டி. பி. விஜயதுங்கா ரணில் விக்கிரமசிங்க சந்திரிகா பண்டாரநாயக்கா இரத்னசிறி விக்கிரமநாயக்கா மகிந்த ராஜபக்ச
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.