எஸ். ஏ. விக்கிரமசிங்க

மரு. சுஜீசுவரா அபெயவர்தனா விக்கிரமசிங (Sugiswara Abeywardena Wickramasinghe, 13 ஏப்ரல் 1901 25 ஆகத்து 1981) இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதி ஆவார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தவர்.[1] 1931 இல் இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவான முதலாவது இடதுசாரி அரசியல்வாதி இவராவார்.

எஸ். ஏ. விக்கிரமசிங்க
S. A. Wickramasinghe
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 13, 1901(1901-04-13)
மாத்தறை மாவட்டம், இலங்கை
இறப்பு 25 ஆகத்து 1981(1981-08-25) (அகவை 80)
கொழும்பு
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) டொரீன் யங் விக்கிரமசிங
படித்த கல்வி நிறுவனங்கள் மகிந்த கல்லூரி
ஆனந்தா கல்லூரி
இலங்கை மருத்துவக் கல்லூரி
தொழில் அரசியல்வாதி, மருத்துவர்
சமயம் பௌத்தர்

விக்கிரமசிங்க மாத்தறை அத்துரெலிய என்ற ஊரில் பிறந்தார்.[1] காலி மகிந்த கல்லூரியில் கல்வி கற்றார். பாடசாலையில் கல்வி கற்கும் போதே சமூக இயக்கங்களிலும், பௌத்த சமய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்றார். அங்கிருந்து இலங்கை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் பட்டம் பெற்றார். பட்டப்பின் ஐக்கிய இராச்சியம் சென்றார். இங்கிலாந்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கத்தில் சேர்ந்தார். இங்கிலாந்தில் அக்காலத்தில் படித்துக் கொண்டிருந்த, பின்னாளில் இடதுசாரித் தலைவர்களாக உருவான என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி. சில்வா, லெஸ்லி குணவர்தன போன்றவர்களினதும், மார்க்சியவாதிகளினதும் நட்பு கிடைத்தது.

1929 இல் இலங்கை திரும்பிய பின்னர், 1943 ஆம் ஆண்டில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தார்.[1] அத்துடன் இலங்கை பௌத்த-இறையியல் சபை பாடசாலைகளின் பொது முகாமையாளராகவும் இருந்து சேவையாற்றினார். அரசு சேவையில் இணைந்து மாத்தறையில் மருத்துவராகப் பணியாற்றினார்.

விக்கிரமசிங்க டொரீன் யங் என்னும் ஆங்கிலேய இடதுசாரிப் பெண்ணைத் திருமணம் புரிந்தார். டொரீன் யங் பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரானார். இருவருக்கும் சுரேன், சூரியா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

அரசியலில்

1931 அரசாங்க சபைத் தேர்தலில் மொரவக்க என்ற இடத்தில் இருந்து லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அரசாங்க சபை உறுப்பினரானார்.[1] 1936 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் மொரவாக்கை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுத் தோற்றார்.[2] எஸ். ஏ. விக்கிரமசிங்கவின் மாஸ்கோ சார்புப் போக்கைக் கண்டித்து 1940 ஆம் ஆண்டில் அவர் சமசமாசக் கடசியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து அவர் 1943 ஆம் ஆண்டில் மாஸ்கோ சார்பு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தார். பீட்டர் கெனமன், ஏ. வைத்திலிங்கம் ஆகியோரும் இவருடன் இணைந்தனர். விக்கிரமசிங்க இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் 1956,[3] 1960 மார்ச்,[4] 1960 சூலை,[5] 1965,[6] 1970[7] தேர்தல்களில் அக்குரசைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். 1977 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார்.[8]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Founder of the Communist Party, The Sunday Times
  2. "Dr. Wickramasinghe - a true patriot and an internationalist". டெய்லி நியூசு (24 ஆகத்து 2006). மூல முகவரியிலிருந்து 21 அக்டோபர் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 செப்டம்பர் 2016.
  3. "Result of Parliamentary General Election 1956". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "Result of Parliamentary General Election 1960 March". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Result of Parliamentary General Election 1960 July". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  6. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  7. "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  8. "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.