வைக்கிங்

வைக்கிங் என்பவர்கள், நோர்ஸ் இனத்தைச் சேர்ந்த, தேடலாய்வோரும் (explorers), போர்வீரர்களும், வணிகரும், கடல் கொள்ளையரும் ஆவர். இவர்கள் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஐரோப்பாவின் பல பகுதிகளைத் தாக்கி அங்கே தமது குடியேற்றங்களை ஏற்படுத்தினர். இவர்கள் தமது புகழ் பெற்ற நீளக்கப்பல்களைப் பயன்படுத்திக் கிழக்கே கொன்ஸ்டன்டினோப்பிள் மற்றும் ரஷ்யாவின் வொல்கா ஆறு வரையும், மேற்கில் ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, நியூபவுண்ட்லாந்து ஆகிய இடங்கள் வரையும் பயணம் செய்தனர். வைக்கிங்குகளின் விரிவாக்கம் நடைபெற்ற இக் காலம் "வைக்கிங் காலம்" என அழைக்கப்படுகின்றது. இக் காலம், ஸ்கண்டினேவியா, பிரித்தானியத் தீவுகள், பொதுவாக ஐரோப்பா ஆகியவற்றின் வரலாற்றின் பெரும்பகுதியை உருவாக்குகின்றது.

டேனியக் கடலோடிகள். 12 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் வரையப்பட்டது.

வைக்கிங்குகள் ஒரு ஜெர்மானியப் பிரபுத்துவக் காட்டுமிராண்டிகள் என்னும் ஒரு வியப்பார்ந்த தோற்றம் 17 ஆம் நூற்றாண்டில், சிறப்பாக விக்டோரியா காலத்தின் வைக்கிங் மறுமலர்ச்சிக் காலத்தின்போது உருவாக்கப்பட்டது. இது பிரித்தானியாவில், செப்டெண்ட்ரியனலிசம் என்றும், ஜெர்மனியில் வக்னேரியன் அல்லது ஜெர்மானிய உள்ளுணர்வு என்றும், ஸ்கண்டினேவிய நாடுகளில், வியப்பார் தேசியம், ஸ்கண்டினேவியனியம் ஆகிய பெயர்களிலும் இம் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இவற்றின் ஒரு தேய் வழக்காகவே தற்காலத்தில் வைக்கிங்குகள் கார்ட்டூன் கதைமாந்தராகச் சித்தரிக்கப்படுகின்றனர்.

தொடக்ககாலம்

வைக்கிங்குகள் கடற்கொள்ளையர்களாக மாறுவதற்கு முன்னர் வடஐரோப்பிவில் வசித்து வந்தனர். வடஐரோப்பாவின் நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்த நிலப்பரப்பு ஸ்காண்டிநேவியா என்று அறியப்பட்டது. வைக்கிங்குகள் இந்நிலப்பரப்பின் பூர்வகுடி மக்களாவர். இவ்வினக்குழுவிற்கு நார்ஸ்மேன் எனும் பெயரும் உள்ளது. நார்ஸ்மேன் என்பதற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருளாகும். நார்வே மலைகளைக் கொண்ட நிலப்பரப்பாகும், சுவீடன் அடர்ந்த காடுகளைக்கொண்ட நிலப்பரப்பாகும், டென்மார்க் மணற்பரப்பு நிரம்பிய பகுதியாகும். விவசாயமும், காலநடைகள் வளர்ப்பதும் இவர்களின் முக்கிய தொழில்களாக இருந்தது. ஆடு, மாடு, பன்றி ஆகிய விலங்குகளை இவர்கள் வளர்த்துள்ளனர். மீன் பிடித்தலும் அதற்கான படகுகளைக்கட்டுவதும் இவர்களின் உப தொழில்களாகும். விவசாயத்தொழில் நலிவடைந்த காரணத்தினால் கடற்பயணம் மேற்கொண்டு கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.

டிராகன் படகுகள்

வைக்கிங்குகள் கொள்ளையடிக்க டிராகன் போன்ற வடிவத்திலிருந்த மரப்படகுகளை வடிவமைத்தனர். பெரிய அளவு டிராகன் படகுகள் முப்பது மீட்டர் நீளம் வரை இருந்துள்ளன. பக்கத்திற்கு பதினாறு எனும் அளவில் மொத்தம் முப்பத்து இரண்டு துடுப்புகளை பயன்படுத்தும் அளவு நீளமானதாகவும், மணிக்கு முப்பத்து இரண்டு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அளவு திறன் வாய்ந்ததாகவும் வைக்கிங்குகளின் படகுகள் இருந்துள்ளன.[1] படகின் முன் பக்கம் டிராகனின் தலை உருவமும், பின் பக்கம் வாலின் உருவமும் இடம்பெற்றிருக்கும். துர்சக்திகளிடமிருந்து படகை காப்பற்ற இது போன்ற வடிவமைப்பை வைக்கிங்குகள் செய்துள்ளனர். வசதி நிறைந்த ஒரு வைக்கிங் இறந்துவிட்டால் அவருடன் சேர்த்து அவரின் படகையும் தீயிட்டு எரித்துள்ளனர்.

வைக்கிங்குளின் மத நம்பிக்கை

அஸ்கார்ட் எனும் இடம் வைக்குங்களின் கடவுள்கள் வாழுமிடமாக கருதப்பட்டு வந்துள்ளது. ஓடின் என்பவர் போருக்குரிய கடவுளாவார். இவர் அனைத்து கடவுள்களுக்கும் தந்தையாகவும், எட்டு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் வலம் வருபவராகவும், நாய் வளர்ப்பவராகவும் வைக்கிங்குகளால் நம்பப்பட்டவர். ஓடினின் மகன் தோர் ஆவார். இவர் இடி, மின்னலின் கடவுளாக கருதப்பட்டவர். ஃபிரைஜா என்பவர் காதலுக்கான பெண்கடவுளாக நம்பப்பட்டவர். ஓடின், தோர், ஃபிரைஜா எனும் கடவுள்களின் பெயர்களே பின்னாலில் புதன்(Wednesday), வியாழன்(Thursday), வெள்ளி(Friday) ஆகிய கிழமைகளின் பெயர்களாக உருமாறியதாக நம்பப்படுகின்றது. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறித்துவ மதம் வைக்கிங்குகளின் மத்தியில் பரவ ஆரம்பித்தது. வைக்கிங் ஓலஃப் என்பவர் ஜோதிடரின் வழிகாட்டுதலின்படி கிபி 994 ஆம் ஆண்டு கிறித்துவராக மதம் மாறினார். பின்னர் மன்னரான அவர் தனது உடன் இருப்பவர்களையும் மதம்மாற்றியுள்ளார். தனது நாட்டில் வைக்கிங் கடவுள்களின் கோவில்களை இடித்துவிட்டு கிறித்துவ கோவில்களைக் கட்டியுள்ளார்.

கொள்ளைத்தொழில்

விவசாயம் அருகியதால் கொள்ளைத்தொழிலில் வைக்கிங்குகள் ஈடுபட ஆரம்பித்தனர். ஆரம்ப காலங்களில் குறைவான படகுகளின் எண்ணிக்கையில் கொளையடிப்பதற்காக சென்றுவிட்டு திரும்ப தனது சொந்த நிலப்பரப்பிற்கு திரும்பி வந்துக்கொண்டிருந்த வைக்கிங்குகள் பின்னர் அதிகப்படியான படகுகளில் சென்று குடியேற்றங்களை உருவாக்க ஆரம்பித்தனர். தற்போதைய கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள சில நகரங்கள் வைக்குங்களின் குடியேற்றத்தினால் உருவான இடங்களாகும். வைக்கிங்குகள் முதன்முதலாக கி.பி 793 ஆம் வருடம் ஜனவரி எட்டாம் திகதி இங்கிலாந்தின் லின்டிஸ்ஃரேனே எனும் ஊரில் கொள்ளையடித்தாக வரலாறுகள் கூறுகின்றன. கார்டர் ஸ்வாவார்சன், நாடோடர், ஃப்லோகி வில்ஜெர்தர்சன் ஆகிய மூன்று வைக்கிங்குகளும் கி.பி 860 முதல் 870 இற்கு இடப்பட்ட காலங்களில் ஐஸ்லாந்திற்கு வந்து சென்றதாக ஐஸ்லாந்தின் இடைக்கால சரித்திர ஆவணமான லேண்ட்னமாபோக் குறிப்பிடுகின்றது. இதில் ஃப்லோகி வில்ஜெர்தர்சன் என்பவரே ஐஸ்லாந்து எனும் பெயர் வைத்ததாக நம்பப்படுகின்றது. ஐஸ்லாந்தில் குடியேற்றங்களை ஏற்படுத்திய வைக்கிங்குகள் இங்கோல்ஃபர் அர்னார்சன் மற்றும் ஜோர்லீஃப் ரோட்மார்ஸன் ஆவர். இவர்கள் ஐஸ்லாந்தின் தந்தை என அழைக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

  1. Hadingham, Evan: Secrets of Viking Ships (05.09.00) NOVA science media.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.