வெண்டளை

வெண்டளை என்பது தமிழ்ப் பாடல்களில் காணப்படும் பண்டைய யாப்பிலக்கணக் குறியீடு. இதன் ஓசை வினாவுக்கு விடை செப்புவது போல அமைந்திருப்பதால் இதனைச் செப்பலோசை எனக் கூறுவர். [1] [2] இது வெண்பா யாப்புக்கு உரியது. எனினும் பிற யாப்புப் பாடல்களிலும் பயின்று வரும். இது இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இரண்டு வகைப்படும்.

வெண்சீர் வெண்டளை

வெண்சீர் என்பது தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என்னும் வாய்பாடுகளைக் கொண்டு அமையும் காய்சீர்கள். காய்ச்சீர் முன் நேர்-அசை வந்து தளைவது வெண்சீர் வெண்டளை.

எடுத்துக்காட்டு

யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. [3]

இயற்சீர் வெண்டளை

ஈரசை கொண்டு தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்னும் வாய்பாட்டான் அமையும் சீர்களை 'இயற்சீர்' என்பர். இந்த இயற்சீர்கள் நேர்-அசையில் முடிந்து நிரை-அசை கொண்டோ, நிரை-அசையில் முடிந்து நேர்-அசை கொண்டோ தளையுமாயின் அது இயற்சீர் வெண்டளை எனப்படும்.

எடுத்துக்காட்டு
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். [4]

அடிக்குறிப்பு

  1. அகவல் என்பது ஆசிரியம்மே (தொல்காப்பியம் 3-386)
  2. 'அஃதாஅன்று' என்ப-'வெண்பா யாப்பே' (தொல்காப்பியம் 3-387)
  3. திருக்குறள் 397
  4. திருக்குறள் 28
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.