விளங்கில்

விளங்கில் என்னும் ஊர் சங்ககாலத்தில் அரபிக்கடல் ஓரத்தில் இருந்தது.

இங்குள்ள கடற்கரையின் மணலில் இப்பி முத்துகள் நெற்கதிர் மணி போலக் கண்ணைப் பறிக்குமாம். இவ்வூரிலிருந்த மாடிகளில் மகளிர் தெற்றி விளையாட்டு விளையாடி மகிழ்வார்களாம்.

சேரர் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் இருந்த இந்த ஊரைச் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சூறையாடித் தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான். [1]

விளங்கில் அரசன் கடலன். இவன் ஒரு சிறந்த கொடையாளி. இவன் ஒரு போரில் தன்னை வேற்படையுடனும், யானைப்படையுடனும் தாக்கிய பகைவரை முறியடித்திருக்கிறான். கடலன் ஆட்சிக்காலத்தில் விளங்கில் கண்ணைப்போல் அழகுடன் திகழ்ந்தது. [2]

அடிக்குறிப்பு

  1. முதிர்வார் இப்பி முத்த வார்மணல் கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும் விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற களங்கொள் யானைக் கடுமான் பொறைய – பொருந்தில் இளங்கீரனார் பாடல் புறம் 53
  2. கறுத்தோர் ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும் மாவண் கடலன் விளங்கில் அன்ன என் மை எழில் உண்கண் கலுழ ஐய சேறிரோ அகன்று செய் பொருட்கே – ஆலம்பேரி சாத்தனார் பாடல் அகம் 81
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.