வாரன் அண்டர்சன்

வாரன் அண்டர்சன் (Warren M. Anderson, நவம்பர் 29, 1921 - செப்டம்பர் 29, 2014) யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும் முதன்மை செயல் அதிகாரியாகவும் இருந்தவர் ஆவார்.

வாரன் அண்டர்சனை அமெரிக்காவிலிருந்து வருவிக்க போபால் பேரழிவு பாதிப்பிற்குள்ளானோர் போராட்டம்

வாழ்க்கை வரலாறு

அண்டர்சன் நியூயார்க்கின் புரூக்லின் நகர்ப்பகுதியில் உள்ள பேரிட்ஜ் பகுதியில் 1921ஆம் ஆண்டு சுவீடிசு பெற்றோர்களுக்குப் பிறந்தார். இவருடைய பெயர் அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் வாரன் ஹார்டிங் நினைவாகப் பெயரிடப்பட்டது. இவர் வடக்கு கரோலினாவில் சாப்பல் ஹில்லில் உள்ள கடற்படை பள்ளியொன்றில் படித்தார். இவரது மனைவி லில்லியன் அண்டர்சன் ஆவார்.[1] இருவரும் நி யோர்க்கின் லாங் தீவில் உள்ள பிரிட்ஜ்ஹாம்ப்டனில் வாழ்கின்றனர். புளோரிடாவின் வெரோ கடற்கரையாரத்திலும் கனெக்டிக்கெட்டின் கிரீன்விச் பகுதியிலும் மேலும் வீடுகள் உள்ளன.[1]

செப்டம்பர் 29, 2014 அன்று புளோரிடாவின் வெரோ கடற்கரையிலுள்ள தமது இல்லத்தில் மரணமடைந்தார். இருப்பினும் இவரது மரணத்தை இவரது குடும்பத்தினர் ஒரு மாதம் வரை அறிவிக்கவில்லை. நியூயார்க் டைம்சு இதழ் பொது ஆவணங்கள் மூலமாக இவரது மறைவை உறுதி செய்துள்ளது.[2]

போபால் பேரழிவு

1984ஆம் ஆண்டு இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் போபால் நகரில் அமைந்திருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்தியக் கிளைநிறுவனமான யூனியன் கார்பைடு இந்தியாவிற்கு சொந்தமான தொழிற்சாலையில் ஏற்பட்ட போபால் பேரழிவு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்கவும் பல்லாயிரவர் பாதிப்படையவும் காரணமாயிற்று.[3] அப்போதைய யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவராக இருந்த அண்டர்சன் மீது இந்திய அதிகாரிகளால் நோக்கம் இல்லாக் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாம் கைது செய்யப்பட மாட்டோம் என்ற வாக்குறுதி பெற்றபின் இந்தியாவிற்கு வந்த அண்டர்சன் அதிகாரிகளால் சட்டக்காவலில் வைக்கப்பட்டார். பிணையம் பெற்று வெளிவந்த அண்டர்சன் அமெரிக்காவிற்கு திரும்பிய பின் மீண்டும் இந்தியா வர மறுத்தார்.

நோக்கமில்லாக் கொலைக்குற்றத்தில் முதலாவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அண்டர்சன் நீதிமன்றத்தில் தோன்றாததால், பெப்ரவரி 1,1992 அன்று போபால் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அவரை நீதித்துறை தப்பியோடியவராக அறிவித்தது.[4] மேலும் 2009ஆம் ஆண்டு சூலை,31 அன்று அண்டர்சன் மீது போபாலின் குற்றவியல் தலைமை நீதிபதி பிரகாஷ் மோகன் திவாரி கைதுசெய்வதற்கான பற்றாணை வெளியிட்டார்.[5] தகுந்த சான்றுகள் இல்லாமையைக் காரணமாகக் கூறி அமெரிக்க அரசு அண்டர்சனை ஒப்படைக்க மறுத்தது.[6]

ஆகத்து 2009 ஆம் ஆண்டில் யூனியன் கார்பைடு தகவல் அலுவலர் ஒருவர் "விபத்து நடந்த காலத்தில் யூனியன் கார்பைடு நிறுவனம் தொழிற்சாலையை நடத்தவில்லை; யூனியன் கார்பைடு இந்தியா (வரம்பிற்குட்பட்டது)விற்கு சொந்தமானது, அதன் ஊழியர்களால் இயக்கப்பட்டும் மேலாளப்பட்டும் வந்தது" என்று கூறினார்.[7] இக்கிளை நிறுவனத்தின் எட்டு உயர்நிலை அதிகாரிகள் சூன் 7, 2010 அன்று குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பெற்றனர். இதனை அடுத்து யூசிசி அலுவலர், "அனைத்து சரியான அலுவலர்கள் - இந்தியக் கிளை நிறுவனத்தின் அதிகாரிகளும் நாளன்றும் இயக்கிய ஊழியர்களும் - தண்டிக்கப்பட்டு விட்டனர்." என்று கூறினார்.

மேற்கோள்கள்

  1. "Wife: Ex-Exec 'Haunted' by Bhopal Gas Leak". CBS News. 1 August 2009. http://www.cbsnews.com/stories/2009/08/01/national/main5204098.shtml.
  2. http://www.nytimes.com/2014/10/31/business/w-m-anderson-92-dies-led-union-carbide-in-80s-.html
  3. http://www.bhopal.com/faq.htm
  4. "knowmore.org". பார்த்த நாள் 3 December 2008.
  5. "Court issues arrest warrant for former CEO of Union Carbide in gas leak case". London: Guardian UK. 31 July 2009. http://www.guardian.co.uk/world/2009/jul/31/warren-anderson-arrest-warrant. பார்த்த நாள்: 31 July 2009.
  6. Lack of Evidence Held up Anderson Extradition: MEA, Times of India, June 10, 2010
  7. Company Defends Chief in Bhopal Disaster, New York Times, Aug. 3, 2009, page B7: http://www.nytimes.com/2009/08/03/business/global/03bhopal.html?_r=1&html

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.