வலயப்படுத்தல்

வலயப்படுத்தல் என்பது, ஒரு நகரம், பிரதேசம் அல்லது வேறு புவியியற் பரப்பிலுள்ள நிலங்களை பகுதிகளாகப் பிரித்து, வெவ்வேறு பயன்பாடுகளுக்காக ஒதுக்குவதைக் குறிக்கும். இவ்வாறு பிரிக்கப்பட்ட பகுதிகள் வலயங்கள் எனப்படுகின்றன. ஒவ்வொரு வலயத்திலும் உள்ள நிலங்களை எவ்வகையான பயன்பாட்டுக்கு உட்படுத்தலாம் என்பது வலயப் படுத்தலின் மூலம் தீர்மானிக்கப் படுகின்றது.

ஒன்றுக்கொன்று ஒத்துவராதவை என்று கருதப்படும் பயன்பாடுகளை வேறுபடுத்துவதே வலயப்படுத்தலின் முதன்மையான நோக்கமாகும். ஏற்கனவே உள்ள, குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்று காணப்படும் பயன்பாடுகள் அத்தகைய இடங்களில் உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூராட்சிகள் வலயப்படுத்தல் விதிகளைப் பயன்படுத்துகின்றன. வலயப்படுத்தல் பொதுவாக மாநகரசபைகளைப் போன்ற உள்ளூராட்சிகளினால் கண்காணித்துக் கட்டுப்படுத்தபடுகின்றன.

குறிப்பிட்ட நிலத் துண்டுகளில், திறந்த வெளி, குடியிருப்பு, வேளாண்மை, வணிகம், தொழிற்சாலை முதலியவற்றில் எத்தகைய நடவடிக்கைகள் அல்லது பயன்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பது தொடர்பான ஒழுங்குவிதிகள் வலயப்படுத்தலில் அடங்குகின்றன. அத்துடன் இவ்வலயங்களில் உள்ள நிலங்களின் பயன்பாடு தொடர்பில் பின்வரும் அம்சங்களும் வலயப்படுத்தலில் அடங்கும்.

  • பயன்பாடுகளின் அடர்த்தி;
  • கட்டிடங்களின் உயரம்;
  • நிலத்துண்டுகளில் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்கள் எடுக்கக்கூடிய பகுதியின் அளவு;
  • நிலத்துண்டுகளின் எல்லைகளில் இருந்து கட்டிடங்கள் அமைக்கப்படக்கூடிய தூரம்;
  • நிலத்துண்டுகளில் அமையக்கூடிய வெவ்வேறு ஏற்றுக்கொள்ளப்பட்ட பயன்பாடுகளுக்கு இடையேயான விகிதங்கள்;
  • வண்டிகளுக்கான வண்டிகள் தரிப்பிட வசதிகளின் அளவு.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.