வஞ்சி அரவம்

தமிழ் இலக்கணத்தில் வஞ்சி அரவம் அல்லது அரவம் என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். இங்கே அரவம் என்பது ஒலி என்னும் பொருள் கொண்டது. படையெடுத்துச் செல்லும்போது நால்வகைப் படைகளும் எழுப்பும் ஒலி பற்றிக் கூறுவதால் இத்துறைக்கு இப் பெயர் ஏற்பட்டது.

போர் முரசின் முழக்கம், போர் வீரர்களின் ஆர்ப்பரிப்பு, யானைப் படையில் இருந்து எழும் இடி போன்ற பிளிறல் ஒலி என்பவை இத்துறை சார்ந்த பாடல்களின் கருப் பொருளாக அமைகின்றன. இதனை விளக்க, வலிமையுடைய வார் கொண்டு கட்டப்பட்ட வீர முரசோடு போர் யானைகள் சேர்ந்து முழங்க அழகிய வாளினையுடைய சேனை சினங்கொண்டு எழுந்தது[1] என்னும் பொருள்படும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

வள்வார் முரசமொடு வயக்களிறு முழங்க"
ஒள்வாள் தானை உருத்து எழுந்தன்று

எடுத்துக்காட்டு

பௌவம் பணைமுழங்கப் பற்றார்மண் பாழாக
வௌவிய வஞ்சி வலம்புனையச் - செவ்வேல்
ஒளிரும் படைநடுவண் ஊழித்தீ யன்ன
களிறும் களித்ததிரும் கார்
- புறப்பொருள் வெண்பாமாலை 36.

குறிப்பு

  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பல். 63

உசாத்துணைகள்

  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.