இலெமூரியா
19 ஆம் நூற்றாண்டு நடுவில் செய்யப்பட்ட இலெமூரியா என்ற புவியியல் புனைக்கோள், ஆப்பிரிக்க- ஆசிய கண்டங்களின் பாலமாக, நிலப்பரப்பாக இந்தியப் பெருங்கடலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என முன்வைக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டு முன்னேயே அது கைவிடப்பட்டது. இதனை சிலர் கண்டமாக இருந்த ஒரு பரந்த நிலப்பரப்பு எனவும் கூறுவர். இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு இலெமூரியா என்று பெயரிட்டார்.[1] சிந்துபாத்தின் கடல் பயன்கள் என்ற திரைபடத்தில் இலெமுரியா பற்றிய குறிப்பு உண்டு. தங்க சூரியன் என்ற நிகழ்பட ஆட்டத்தில் இலெமுரியா வில் ஒரு பகுதியில் ஆட்டத்தின் கதை அமைந்து இருக்கும்.
அறிவியல் கூற்றுகள்
இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. பிலிப் ஸ்க்லேட்டெர் என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மேலும் இவ்வகை தொல்லுயிர் எச்சம் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கரபு கண்டங்களில் இல்லை எனவும் விளக்குகின்றார்.
ஸ்க்லேட்டரின் இக்கூற்றானது அவரது காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஆனால் சார்லஸ் டார்வின் கூற்றான "ஒரு குறிப்பிடப்பட்ட விலங்கினமானது பூமியில் ஒரு முனையிலும் அதே இனமானது பூமியின் வேறு முனையினும் வாழ்ந்து வருவதன் காரணங்களினால் பண்டைக் காலங்களில் ஏற்பட்ட நிலவதிர்வுகள் மற்றும் நிலப்பிரிவுகள் போன்ற நிகழ்வுகளினால் இவ்வாறு ஒரே இனமானது பூமியின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்க முடியும்" என்ற கூற்றினை ஏற்றனர். இவ்வாறு ஏற்பட்ட கணிப்பின் படி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா மற்றும் அதன் நிலப்பரப்பு பரந்து விரிந்து ஆப்பிரிக்க கண்டங்களுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்நேரம் இருக்கப்பெற்ற இலெமூரியாக் கண்டமானது பல அரிய ஆன்மீகச் ஆற்றல்கள் பல கொண்ட இனங்களின் தலைமையிடமெனச் சிலர் கூறுகின்றனர். அஃது போலவே ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலெமூரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில அறியலாளர்கள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். அதாவது அமெரிக்க ஆசியக் கண்டங்கள் சிலவற்றிலும் இலெமூர் இனங்கள் காணப்படுவதாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
புவிஓடு அசைவுகள்,கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய அறிவியல் கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டபின், ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல் அமையலாம் என்ற இலெமூரிய புனைக்கோள் கைவிடப் பட்டது. புதிய கடலாய்வுகள் இந்துமாக்கடலில் செய்யப்பட்டு, அதன் விளைவாக 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெற்கு இந்துமாக்கடலில் இருந்த நிலப்பாகம் நீர்க்கடியில் மூழ்கியிருக்க வேண்டும் என்று நம்பப் படுகின்றது.
பலராலும் கைவிடப்பட்ட இலெமூரியாக் கூற்றானது நிலச் சரிவுகள் மற்றும் கண்ட அசைவுகள் போன்ற பல காரணங்களைக் கூறி இக்கண்டத்தின் தோற்றமானது மறுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
"பிலாவற்ஸ்கி"அம்மையாரின் இலெமூரியா

1880 ஆம் ஆண்டுகளின் பிலாவற்ஸ்கி அம்மையாரின் கூற்றுகளின் படி அட்லாண்டிக் கண்டம் கண்டுபிடிப்பிற்கு முந்தைய காலங்களில் ட்சையன் Book of Dzyan என்னும் நூலிதினை மகாத்மாக்கள் அவருக்கு வழங்கியதெனவும் மேலும் இலெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்த இனமானது மூன்றாம் தலைமுறை இனமாகவும் இருக்கப்பெற்றதை விளக்குகின்றார். ஹெர்மப்ரோடைட் (hermaphrodite) என்னும் இனத்துடன் பாலியல் வகையினைச் சார்ந்தனவையாகவும் அறிவினால் வளர்ச்சியடையாதனவையாகவும் ஆன்மீகத்தினால் வலிமை மிக்கதாகவும் இருக்கப்பெற்றதெனவும் பிலாவற்ஸ்சி அம்மையார் விளக்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வினமானது இன்றைய ஐந்தாம் தலைமுறையினருக்கான ஆன்மீக ஆற்றல்களைவிட உயர்ந்த ஆன்மீகத்தினைக் கொண்டுள்ளனவாக இருக்கப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் கூற்றுப்படி சில இலெமுரியர்கள் ஆன்மீகப் பலமடைந்த பின்னர் அறிவுயிர்கள் அல்லாத இலெமுரிய இனங்கள் வாழ்ந்த இலமூரியாக் கண்டத்தினை அழித்தனவாகவும் அந்நூலின் மூலம் மகாத்மாக்கள் தெரிவித்திருந்தன எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலெமூரியாவும் சாஸ்ட மலைகளும்
1894 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் பிரெட்ரிக் ஸ்பென்சர் ஒலிவர் வெளியிட்ட நூலான (A Dweller on Two Planets) கூறப்பட்டுள்ள படி அழிவிற்குட்பட்ட கண்டமான இலமூரியாவில் வாழ்ந்து வந்த அறிவுயிர்கள் கலிபோர்னியாவிலுள்ள சாஸ்ட மலைத்தொடர்களில் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் வெள்ளை நிறக் கயிறுகளான ஆடைகளை அணிந்து செல்வதைப் பார்த்துள்ளதாகத் தெரிவிக்கும் இக்கூற்றினைப் போலவே 1930 ஆம் ஆண்டுகளில் காய் வாரென் பலார்ட் உருவாக்கிய அமைப்பான ஜ ஆம் அமைப்பும் இவ்வெள்ளையின சகோதரர்களின் பாதைகளினைக் கடைபிடிப்பவர்கள் எனக் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல அமைப்புகள் இவ்வமைப்பைத் தொடர்ந்து தொடங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.(Bridge to Freedom, Summit Lighthouse, Church Universal and Triumphant, Temple of the Presence, and Hearts Center).
குமரிகண்டமும் இலெமூரியாவும்
குமரிக்கண்டம் என்னும் கண்டம் பண்டையக்காலத்தில் அழிவிற்குட்பட்டதாக இலக்கியகூற்றுக்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை அடிப்படையாய்க் கொண்டு தமிழறிஞர்கள் பலர் கருதுகின்றனர். இக்குமரிக் கண்டமே இலெமூரியாக் கண்டம் என்று கூறுவாரும் உளர்.
இலெமூரியாக் கண்டம் பிளவுபட்டதைப் போல் பல கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய நிலவெடிப்பு அண்மையில் தென் மேற்கு கென்யாவில் திடீரென தோன்றியது. இந்த பிளவானது 50 அடி ஆழமும், 65 அடி அகலமும் கொண்டதாக சில இடங்களில் உள்ளது. இன்னும் 5 கோடி வருடங்களில், சோமாலியா, எத்தியோப்பியாவின் பாதி பகுதிகள், கென்யா மற்றும் தான்சானியா ஆகியவை ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து புதிய கண்டத்தை உருவாக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.[2]
வெளி இணைப்புகள்
- The Stanzas of Dzyan, by H.P. Blavatsky
- Manufactured folklore: Shasta Lemuria.
- An Atlantis in the Indian Ocean
- புவியியல் காலங்களில் கண்ட ஓட்டங்கள்
- புவிஓடு அசைவுகள் ஓரு அறிமுகம்
- 1999ஆம் ஆண்டின் கடலியல் கப்பல்களின் புவியியல் கண்டிபிடிப்பு.
- சுமதி ராமசாமியின் புத்தகத்தின் ஓர் விமர்சனம்
- Graham Hancock-ன் பூம்புகார் ஆராய்ச்சி வெளியீடுகள் உறுதிப்படுத்தும் குமரிக்கண்ட உண்மைகள்
மேற்கோள்களும் ஆதாரங்களும்
- பக்கம் 44, மறைந்த கண்டங்கள் பற்றிய மரபுகள், குமரி நில நீட்சி - சு.கி. ஜெயகரன், டிசம்பர் 2002, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 629001 ஐ.எஸ்.பி. என்: 81-87477-34-2
- "மீண்டும் பிளவுபடத் தொடங்கும் ஆப்பிரிக்கா – குமரிக்கண்டம் உண்மை தானா?".