யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா

ஜொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா (Johann Wolfgang von Goethe - 28 ஆகஸ்ட் 1749 – 22 மார்ச் 1832) ஒரு ஜேர்மானிய எழுத்தாளர் ஆவார். ஜேர்மனியின் மிகப் பெரிய எழுத்தாளர் என்றும், புவியில் வாழ்ந்த உண்மையான கடைசிப் பல்துறை அறிஞர் எனவும் ஜார்ஜ் எலியட்டினால் பாராட்டப்பட்டவர். இவரது ஆக்கங்கள், கவிதை, நாடகம், இலக்கியம், இறையியல், மனிதநேயம், அறிவியல் போன்ற பல துறைகளையும் தழுவியவை. இவரது மிகச் சிறந்த ஆக்கமாகக் கருதப்படும் ஃபோஸ்ட் (Faust) என்னும் இரண்டு பாகங்களைக் கொண்ட நாடகம் உலக இலக்கியத்தின் உயர்நிலைகளுள் ஒன்று எனப் புகழப்படுகின்றது. இது தவிர பல கவிதைகளும், வில்ஹெல்ம் மீஸ்டரின் தொழிற்பயிற்சி (Wilhelm Meister's Apprenticeship), இளம் வேர்தரின் துன்பங்கள் (The Sorrows of Young Werther) போன்றவையும் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களுள் அடங்குவன.

யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா

பிறப்பு யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா
ஆகத்து 28, 1749(1749-08-28)
பிராங்க்பர்ட், புனித ரோமப் பேரரசு
இறப்பு 22 மார்ச்சு 1832(1832-03-22) (அகவை 82)
வைமர், ஜெர்மனி
தொழில் கவிஞர், புதின எழுத்தாளர், நாடகாசிரியர், இயற்கை மெய்யியலாளர், தூதர்
நாடு ஜேர்மான்யர்
எழுதிய காலம் புனைவியல்
இயக்கம் Sturm und Drang; வீமர் செந்நெறியியம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
Faust; The Sorrows of Young Werther; Wilhelm Meister's Apprenticeship; Elective Affinities
துணைவர்(கள்) கிறித்தியான் வல்பயஸ்

கேத்தா ஜேர்மானிய இலக்கியத்தினதும், 18 ஆம் நூற்றண்டின் பிற்பகுதியையும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தையும் சேர்ந்த வீமர் செந்நெறியியம் (Weimar Classicism) என்னும் இயக்கத்தினதும் முக்கிய நபர்களுள் ஒருவர். இந்த இயக்கம் அறிவொளி இயக்கம், புனைவியல் இயக்கம் போன்றவற்றின் காலப்பகுதியைச் சேர்ந்தது. நிறங்களின் கோட்பாடு (Theory of Colours) என்னும் அறிவியல் நூலொன்றையும் இவர் எழுதினார். தாவர உருவவியல் தொடர்பான இவரது கருத்துக்களின் தாக்கம் டார்வினுடைய பணிகளில் காணப்படுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.